
3 முறை கோப்பை வெற்றி
சிஎஸ்கே கேப்டனாக தோனி, அணி ஆரம்பித்த நாள் முதல் இருந்து வருகிறார். அந்த அணி கோப்பையை 3 முறை வெல்லவும் காரணமாக இருந்துள்ளார். அணியில் உள்ள ஜூனியர்கள் மற்றும் சீனியர் வீரர்களுக்கு பாலமாக இருந்து அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்து வருகிறார். ஐபிஎல்லின் மிகச்சிறந்த அணியாக சர்வதேச அளவில் வீரர்கள் அனைவரும் சிஎஸ்கேவை பாராட்டவும் அவர் காரணமாக இருக்கிறார்.

சர்வதேச போட்டிகளை தவிர்க்கும் தோனி
கடந்த ஆண்டில் நடைபெற்ற உலக கோப்பை தொடரின் அரையிறுதியில் நியூசிலாந்திடம் இந்திய அணி தோல்வியுற்ற நிலையில், அதுமுதல் சர்வதேச போட்டிகளை தவிர்த்து வருகிறார் தோனி. இதனால் அவரது திறமை குறைந்துள்ளதாகவும் அவர் ஓய்வை அறிவிக்க வேண்டும் என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் இந்த கருத்துக்களுக்கு அவர் தொடர்ந்து தனது ஆட்டங்களின் மூலம் பதிலளித்து வருகிறார்.

அசத்தும் தோனியின் பேட்டிங்
ஐபிஎல் தொடருக்கான பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்பதற்காக கடந்த மாதம் துவக்கத்தில் சென்னை வந்த தோனி, கூடியிருந்த ரசிகர்கள் மத்தியில் சிறப்பான ஆட்டத்தை பதிவு செய்தார். நிஜ ஆட்டங்களை காண்பதை போன்ற அனுபவத்தை அவர் ரசிகர்களுக்கு தந்தார். கூட்டத்தின் ஆர்ப்பரிப்பின் மத்தியில் அவரது ஆட்டம் வெகுவாக ரசிக்கப்பட்டது.

சிஎஸ்கே பௌலிங் கோச் புகழாரம்
இந்நிலையில், இடைவெளிவிட்டுள்ள போதிலும் தோனியின் திறமை சிறிதுகூட குறையவில்லை என்று சிஎஸ்கே அணியின் பௌலிங் கோச் எல் பாலாஜி தெரிவித்துள்ளார். 6 மாதங்களுக்கு மேல் இடைவெளி விட்டுள்ள போதிலும் தோனியின் திறமை மாறவில்லை என்றும் ரோஜர் பெடரர், டைகர் வுட்ஸ் போன்ற பிரபலங்களும் பல சர்வதேச தொடர்களில் ஆடாமல் வந்து தங்களது திறமைகளை நிரூபித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

நல்ல புரிதலுடன் உள்ளார்
தோனி தன்னுடைய 25, 26 வயதில் ஆடிய கிரிக்கெட்டை அவரிடம் எதிர்பார்க்கக்கூடாது என்றும், ஆனால் தற்போது கிரிக்கெட் குறித்த சரியான புரிதலுடன் அவர் உள்ளதாகவும் பாலாஜி குறிப்பிட்டுள்ளார். இடைவெளி விட்டுள்ள போதிலும், கடந்த பயிற்சியாட்டத்தின்போது தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தியதாகவும், அதுவே அவரது தனித்தன்மை என்றும் பாலாஜி மேலும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











