மெல்போர்ன்: டிசம்பர் மாதம் ஆரம்பித்த டோணியின் டெஸ்ட் ஓட்டம், டிசம்பர் மாதத்திலேயே முடிவடைந்துள்ளது.

2005ம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில்தான் டோணி முதன்முறையாக டெஸ்ட் அணியில் இடம் பிடித்தார். முதல் மூன்று நாட்கள் மழையால் ஆட்டம் நடைபெறாத நிலையில், டிசம்பர் 5 மற்றும் 6ம் தேதிகளில் 2 நாள் மட்டுமே அந்த டெஸ்ட் போட்டி நடந்தது. எனவே எதிர்பார்த்தபடி போட்டி டிராவில் முடிந்தது. அப்போட்டியில் 54 பந்துகளில் 30 ரன்கள் எடுத்திருந்தார் டோணி. அப்போது அவருக்கு 24 வயது.
9 வருடங்கள் கடந்த நிலையில் 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள டோணிக்கு தற்போது 33 வயதாகிறது. அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று முடிவடைந்த டெஸ்ட் போட்டியுடன் டெஸ்ட் அணியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்த போட்டியும் டிராவிலேயே முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.