2007 டி20 உலகக்கோப்பை
2007 டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி பெரிய எதிர்பார்ப்பு இன்றி, தோனி தலைமையில் ஆடியது. அதற்கு முன் இந்திய அணி மிகச் சில டி20 போட்டிகளில் மட்டுமே ஆடி இருந்தது. இந்த சூழ்நிலையில், 2007 உலகக்கோப்பை தொடரில் டி20 போட்டிகளில் முதல்முறையாக டை செய்தது இந்திய அணி.
பாகிஸ்தானுடன் லீக் போட்டி
லீக் சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா 141 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய பாகிஸ்தான் அணியும் 20 ஓவர்கள் முடிவில் 141 ரன்கள் எடுத்தது. இதை அடுத்து போட்டி டை ஆனது. அப்போது சூப்பர் ஓவர் நடைமுறையில் இல்லை.
பவுல் அவுட் முறை
டி20 போட்டிகள் டை ஆனால் பவுல் அவுட் முறையில் தான் வெற்றி தீர்மானிக்கப்படும். அதாவது இரண்டு அணிகளிலும் பவுலர்கள் பேட்ஸ்மேன் இல்லாத நிலையில், ஸ்டம்ப்பை குறி வைத்து தகர்க்க வேண்டும். ஐந்து வாய்ப்புகள் வழங்கப்படும். அதிக முறை ஸ்டம்பை தகர்க்கும் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.
வெங்கடேஷ் பிரசாத் பயிற்சி
அந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் வெங்கடேஷ் பிரசாத். பவுல் அவுட் எல்லாம் நடக்குமா? என பலரும் நினைத்த நிலையில், எந்த வாய்ப்பையும் விட்டுக் கொடுக்காத வெங்கடேஷ் பிரசாத் இந்திய வீரர்களுக்கு பவுல் அவுட் பயிற்சி அளித்தார்.
பேட்ஸ்மேன்கள் அணி
அதுவும் பேட்ஸ்மேன்கள் அணி, பந்துவீச்சாளர்கள் அணி என பிரித்து விளையாட வைத்தார். அதில் எப்போதும் பேட்ஸ்மேன்கள் அணி தான் அதிகம் வெல்லும். சேவாக், ராபின் உத்தப்பா, ரோஹித் சர்மா போன்றோர் அதிக முறை ஸ்டம்ப்பை தகர்த்து இருந்தனர்.
தோனி பயன்படுத்திய 3 வீரர்கள்
இதை அறிந்த நிலையில், அந்தப் போட்டியில் பவுல் அவுட்டின் போது தோனி சேவாக், ராபின் உத்தப்பாவுடன், பந்துவீச்சாளர்களில் ஹர்பஜன் சிங்கை மட்டுமே பயன்படுத்தினார். முதலில் சேவாக், அடுத்து ஹர்பஜன் சிங், அதன் பின் ராபின் உத்தப்பாவை பயன்படுத்தினார் தோனி. மூவருமே ஸ்டம்ப்பை தகர்த்தனர்.
பாகிஸ்தான் பயிற்சி செய்யவில்லை
பாகிஸ்தான் அணியில் மூன்று பந்துவீச்சாளர்கள் பந்து வீசினர். ஒருவர் கூட ஸ்டம்ப்பை தகர்க்கவில்லை. அவர்கள் அதற்கான பயிற்சி மேற்கொள்ளவில்லை என்பது தெளிவாக தெரிந்தது. மேலும், தோனி விக்கெட் கீப்பராக ஒரு அருமையான யுக்தியை கையாண்டார்.
விக்கெட் கீப்பர் நிற்கும் திசை
எப்போதும் விக்கெட் கீப்பர்கள் ஆஃப் சைடு ஸ்டம்ப்புக்கு நேராகவோ, அல்லது அதற்கு ஒரு அடி தள்ளியோ தான் நிற்பார்கள். அப்போது தான் பந்தை எளிதாக பிடிக்க முடியும். பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் கம்ரான் அக்மல் அப்படித் தான் நின்றார்.
இந்தியா வெற்றி
ஆனால், தோனி ஸ்டம்ப்புக்கு நேராக நின்றார். எனவே, பவுல் அவுட்டில் பந்து வீசிய மூன்று இந்திய வீரர்களும் தோனிக்கு குறி வைத்து வீசினர். பந்து எளிதாக ஸ்டம்ப்பை தகர்த்தது. இந்தியா ஐந்து வாய்ப்புகள் வரை காத்திருக்காமல் மூன்றாவது வாய்ப்பின் முடிவிலேயே 3 - 0 என பாகிஸ்தான் அணியை பவுல் அவுட்டில் வீழ்த்தியது.