மும்பை: ஓய்வு குறித்து சரியான நேரத்தில் அறிவிப்பேன். கிரிக்கெட்டில் இருந்து இப்போதைக்கு ஓய்வு இல்லை என்று இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி கூறியுள்ளார்.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி கேப்டனாக இருக்கும் விராட் கோஹ்லி சிறப்பாக செயல்பட்டு பல வெற்றிகளை குவித்து வரும் நிலையில், தோனியிடம் மீண்டும் மீண்டும் ஓய்வு குறித்த கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. எப்பொழுதெல்லாம் இந்த கேள்வி எழுகிறதே அப்போதெல்லாம் தனக்கே உரிய புன்னகையுடன் பதில் அளித்து வருகிறார் தோனி.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுவதற்காக இன்று ஆஸ்திரேலியா புறப்பட்டது. பயணத்திற்கு முன்பு தோனியிடம் ஓய்வு குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அப்போது தனது ஓய்வு குறித்து பேச இது சரியான நேரம் அல்ல என்றார்.
இப்போது எனது கவனம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில்தான் உள்ளது. கிரிக்கெட்டில் இருந்து இப்போதைக்கு ஓய்வு இல்லை. சரியான நேரத்தில் என்னுடைய ஓய்வு குறித்து யோசிப்பேன் என்றார்.
கடந்த ஓராண்டாக டோனியின் பேட்டிங் சொல்லிக் கொள்ளும் அளவில் இல்லை. அதனால் தோனியிடம் தொடர்ந்து ஓய்வு குறித்த கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. மேலும் வரும் டி20 உலகக்கோப்பையுடன் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவார் என்று கூறப்பட்டது. இதை குறிவைத்துதான் இன்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.