ராஞ்சி: நியூசிலாந்துக்கு எதிரான நேற்றைய 4வது ஒருநாள் போட்டியில், மோசமான ஷாட் தேர்வுகளால் இந்தியா அவ்வப்போது விக்கெட்டுகளை இழந்து தோற்றபோதிலும், இளம் வீரர்கள் அடித்து ஆடுவதை தடுக்கப்போவதில்லை என கேப்டன் டோணி கூறியுள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிராக நேற்று, ராஞ்சியில் நடைபெற்ற 4வது ஒருநாள் போட்டியில் இந்தியா 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தது. போட்டிக்கு பிறகு டோணி கூறியதாவது: டெல்லி போட்டியை போலவே, அவ்வப்போது விக்கெட்டுகளை பறி கொடுத்ததால்தான் இப்போட்டியில் தோல்வியடைந்தோம். இந்திய அணியின் 5வது 6வது வரிசையில் களமிறங்கும் பேட்ஸ்மேன்கள், சர்வதேச போட்டிகளுக்கு புதியவர்கள்.

இளம் வீரர்கள் கற்றுக்கொள்ள கொஞ்சம் நேரம் பிடிக்கத்தான் செய்யும். சிலர் உடனடியாகவே பெரிய ஷாட்டுகளை ஆட முயல்வார்கள், சிலர் மெதுவான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள். கிரிக்கெட் உலகம் மாறிவிட்டது. இப்போது இளைஞர்கள் பெரிய ஷாட் ஆடுவதையே பாதுகாப்பாக உணர்கிறார்கள்.
15-20 போட்டிகளுக்கு பிறகு தங்களுக்கான ஷாட் எது என்பதில் அவர்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும். அதன்பிறகு இந்தியாவுக்காக அவர்கள் நீண்டகாலம் சிறப்பாக பங்களிப்பை தர முடியும். எனவே, பெரிய ஷாட்டுகளை ஆட வேண்டாம் என்று எனது இளம் வீரர்களிடம் நான் அறிவுரை கூறப்போவதில்லை. அவர்கள் விருப்பம்போல ஆடிக்கொள்ளலாம்.
மேலும், நியூசிலாந்து பேட் செய்தபோது முதல் 10 ஓவர்களில் இந்திய பவுலர்கள் ரன்களை வாரி கொடுத்தது தோல்விக்கு ஒரு முக்கிய காரணமாக இருந்தது. இரவில் பந்துகள் நல்லபடியாகவே பேட்டுக்கு வந்தது. அதை பயன்படுத்தி்ககொள்ளவில்லை. இவ்வாறு டோணி தெரிவித்தார்.