கார்டிப்:மைதானத்தில் வங்கதேச வீரரின் பீல்டிங்கை தோனி சரிசெய்ய சொல்லிய வீடியோ சமூக வலைதளங்களில் ஹிட்டடித்து இருக்கிறது.
இந்தியா, வங்கதேசம் இடையேயான பயிற்சி ஆட்டம் நேற்று நடைபெற்றது. ஆட்டத்தில், இந்தியா அணி அபார வெற்றி பெற்றது. கேஎல் ராகுல் மற்றும் தோனி ஆகிய இருவரும் சதமடித்து அசத்தினர். அதேபோல் பந்து வீச்சாளர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

அதில் சுழற்பந்து வீச்சாளர்களான குல்தீப் யாதவ் மற்றும் சஹால் தலா 3 விக்கெட்டுகளையும், பும்ரா 2 விக்கெட்டுகளையும் ஜடேஜா 1 விக்கெட்டும் எடுத்தனர். இதில் 5 ஓவர்களை வீசிய புவனேஸ்வர்குமார் விக்கெட் எதுவும் எடுக்கவில்லை. ஆனாலும் 19 ரன்கள் மட்டுமே கொடுத்து வங்கதேச அணியை திணறடித்தார்.
போட்டியில் தோனி பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது வங்கதேச வீரர்களின் பீல்டிங்கை சரிசெய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. முதல் இன்னிங்ஸின் 40வது ஓவரின் இந்த சம்பவம் நிகழ்ந்தது. அந்த ஓவரை சபீர் ரகுமான் வீசினார்.
அப்போது, வங்கதேச வீரர் ஒருவர் தவறான இடத்தில் நின்று பீல்டிங் செய்து கொண்டிருந்தார். அதனை கவனித்த தோனி பந்துவீச வந்த வங்கதேச வீரரை நிறுத்தி, பீல்டிங்கில் உள்ள தவறை சுட்டிக்காட்டினார். இதனை அடுத்து அந்த வீரர் சரியான இடத்துக்கு சென்றார். தோனியை பீல்டிங்கில் கூட யாரும் ஏமாற்ற முடியாது என அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.