தோனி நிலை என்ன?
தோனி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று சில வருடங்கள் ஆகிவிட்டது. ஒருநாள் போட்டிகளில் அவரது ஃபார்ம் சரியில்லை. ரன்கள் குவிக்க தடுமாறி வருகிறார். இந்த நிலையில், டி20 அணியில் தோனிக்கு இடம் மறுக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் போட்டிகள் ஆடுவதில்லை
தோனி ஃபார்ம் சரியில்லை எனும் பட்சத்தில் அதற்கான எந்த சிறப்பு பயிற்சியிலும் ஈடுபட்டதாக தெரியவில்லை. அதே போல உள்ளூர் கிரிக்கெட் தொடர்களிலும் பங்கேற்பதில்லை. தோனி உள்ளூர் போட்டிகளில் ஆடவேண்டும் என்பது குறித்து, தேர்வுக் குழு தலைவர் பிரசாத், முன்னாள் வீரர்கள் கவாஸ்கர், கங்குலி என பலரும் கூறி விட்டனர். ஆனால், அவர் இதுவரை ரஞ்சி தொடரிலோ மற்ற உள்ளூர் போட்டிகளிலோ பங்கேற்கவில்லை.
மாநிலத்திற்கு ஆடுவது முக்கியம்
மொஹிந்தர் அமர்நாத் இது குறித்து பேசுகையில், "நீங்கள் இந்தியாவிற்கு ஆட வேண்டும் என விரும்பினால், உங்கள் மாநிலத்துக்கும் ஆட வேண்டும் என நான் நம்புகிறேன், நிறைய மூத்த வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் ஆடுவதில்லை" என தோனிக்கு சுட்டிக் காட்டியுள்ளார்.
பிசிசிஐ விதி வேண்டும்
"பிசிசிஐ இதை ஒரு தேர்வு செய்யும் முறையாக மாற்ற வேண்டும். இந்தியாவிற்கு ஆடவில்லை என்றால் மாநிலத்துக்கு தொடர்ந்து ஆட வேண்டும். அணித் தேர்வுக்கு முன் மட்டுமல்ல, எப்போதுமே அவர்கள் ஆட வேண்டும். அப்போது தான் அந்த வீரர் எப்படி ஆடுகிறார் என கணிக்க முடியும்" என்றார் அமர்நாத்.
இதெல்லாம் நடக்குமா?
தோனியை பொறுத்தவரை 2019 உலகக்கோப்பை தான் அவரது கடைச தொடர் என்ற முடிவுக்கு அவர் உட்பட அனைவரும் வந்தாகி விட்டது. தோனி இனி தன்னை நிரூபித்து அணியில் இடம் பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. உலகக்கோப்பை வரை சிறந்த விக்கெட் கீப்பர் என்று சொல்லியே அவரை அணியில் ஆட வைத்து விடுவார்கள். ஆனால், தோனியின் பேட்டிங் அணிக்கு உதவியாக இருக்க வேண்டும். சுமையாக மாறி விடக் கூடாது. அதற்காகவாவது தோனி உள்ளூர் போட்டிகளில் ஆடி தன் பேட்டிங் திறனை மெருகேற்றிக் கொள்ள வேண்டும். ஆனால், இது நடக்குமா?