
முதல் அணியாக சிஎஸ்கே
2020 ஐபிஎல் தொடருக்கு முதல் அணியாக தயார் ஆனது சிஎஸ்கே. ஏப்ரல் - மே மாதத்தில் ஐபிஎல் தொடர் நடக்க இருந்த போது மார்ச் முதல் நாள் முதலே பயிற்சி முகாமை துவக்கி மற்ற அணிகளை திகைக்க வைத்தது சிஎஸ்கே.

தவிடு பொடியான திட்டங்கள்
ஆனால், கொரோனா வைரஸ் பாதிப்பு அனைத்து திட்டங்களையும் தவிடு பொடியாக்கியது. ஐபிஎல் தொடர் கால வரையின்றி தள்ளி வைக்கப்பட்டு பின் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதுவும் இந்த முறை கொரோனா வைரஸ் பாதிப்பால் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு
அங்கே முதல் வாரம் குவாரன்டைனில் இருந்த போது சிஎஸ்கே அணியில் இரு வீரர்கள் உட்பட 13 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. அதனால் சிஎஸ்கே அணி நிலை குலைந்த நிலையில், இடையே துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா விலகினார்.

இரு வீரர்கள் விலகல்
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக சுரேஷ் ரெய்னா விலகியதாக கூறப்பட்டது. அவர் மீண்டும் அணியில் இணைவாரா? இதே சீசனில் ஐபிஎல் தொடரில் பங்கேற்பாரா? என்பதில் குழப்பம் நிலவி வருகிறது. அத்துடன் ஹர்பஜன் சிங்கும் 2020 ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

ரசிகர்கள் மனம் உடைந்தனர்
இதை அடுத்து சிஎஸ்கே அணி பெரும் இழப்பை சந்தித்ததை எண்ணி ரசிகர்கள் மனம் உடைந்து இருந்தனர். இந்த நிலையில், பாதிப்புக்கு உள்ளான இரண்டு வீரர்கள் தவிர்த்து மற்ற சிஎஸ்கே வீரர்கள் வலைப் பயிற்சியை துவக்கினர்.

புன்னகையுடன் பயிற்சி
அப்போது தோனி புன்னகையுடன் பயிற்சி செய்ய வந்தார். அந்த புகைப்படத்தை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளது சிஎஸ்கே அணி. அந்த புகைப்படத்தின் கீழ் "நம் சிங்க ராஜா முதல் நாளுக்கு தயார் ஆகி விட்டார். உடைந்த இதயங்களுக்கு மருந்தாகும் புன்னகையுடன்.." என எழுதப்பட்டு இருந்தது.

எதையும் தாங்கும் இதயம்
அந்த பதிவுக்கு சிஎஸ்கே ரசிகர்கள் பெரும் வரவேற்பு அளித்தனர். இப்போது தான் தாங்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதாக பலரும் குறிப்பிட்டனர். சிலர் சிஎஸ்கே அணி அடுத்தடுத்து அடி வாங்கினாலும், கேப்டன் தோனி புன்னகையுடன் இருப்பதை குறிப்பிட்டு எதையும் தாங்கும் இதயம் என்றும் கூறி இருந்தனர்.

சிஎஸ்கே தாமதம்
மற்ற அணிகளை காட்டிலும் சிஎஸ்கே அணி ஒரு வாரம் தாமதமாக பயிற்சி செய்யத் துவங்கி உள்ளது. சிஎஸ்கே அணி ஐபிஎல் லீக் சுற்றில் தாமதமாக தன் முதல் போட்டியில் ஆட வாய்ப்பு உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பில் உள்ள வீரர்கள் 14 நாட்கள் கழித்து, இரண்டு நெகட்டிவ் பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே பயிற்சியில் இணைய முடியும்.


Click it and Unblock the Notifications