டெல்லி: உலகின் மிகச் சிறந்த கேப்டன்களில் டோணியும் ஒருவர். எனவே டுவென்டி 20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியாவின் தோல்விக்காக அவரை விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும் என்று இலங்கை சுழற்பந்து வீச்சாளரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய உறுப்பினருமான முத்தையா முரளிதரன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் மிகச் சிறந்த கேப்டன்களில் டோணியும் ஒருவர். எனவே ஒரு மோச்மான தொடரை அடிப்படையாக வைத்து அவரை விமர்சிப்பது நியாயமற்ற ஒன்றாகும்.
மேற்கு இந்தியத் தீவுகளில் நடந்த டுவென்டி 20 ஒரு நாள் தொடரில் இந்தியா வெளியேறியதைத் தொடர்ந்து அந்த அணியையும், டோணியையும் கடுமையாக விமர்சித்ததைப் பார்த்து நான் வியந்து போனேன்.
சிறந்த கேப்டன் டோணி. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்தவர். அது முடிந்து ஒரு வாரம் கழித்து டுவென்டி 20 உலகக் கோப்பைப் போட்டியில்இந்தியா வெளியேறியதைத் தொடர்ந்து டோணியை விமர்சிப்பது நியாயமற்றதாகும்.
இந்தியாவில் நீங்கள் வெல்லும்போது சிறந்தவராக பார்க்கப்படுகிறீர்கள். அதுவே வெளியில் போய் தோற்கும்போது மோசமானவராக சித்தரிக்கப்படுகிறீர்கள்.
ஆனால் ஒரே வாரத்தில் ஒருவரின் திறமையை மதிப்பிட முடியாது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும் என்றார் முரளிதரன்.
ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர் முரளிதரன். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கியப் பந்து வீச்சாளரும் கூட என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே ஆஸ்திரேலிய வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கியப் பந்து வீச்சாளருமான போலிங்கரும் கூட டோணி உலகிலேயே சூப்பர் கேப்டன் என்று வெகுவாகப் புகழ்ந்து பேசியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.