டெல்லி: மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக தன்மீது குற்றச்சாட்டு சுமத்தி செய்தி வெளியிட்ட ஹிந்தி பத்திரிகைக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ள இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோணி, அந்த பத்திரிகை மறுப்பு செய்தி வெளியிடாவிட்டால் ரூ.100 கோடியை இழப்பீடாக தர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் மேலாளரும், தற்போது டெல்லி கிரிக்கெட் சங்க செயலாளருமாக உள்ள, சுனில் தேவ் அளித்த பேட்டியில், கடந்த 2014ம் ஆண்டு மான்செஸ்டரில் நடந்த டெஸ்ட் போட்டியின் போது, இந்திய அணியின் கேப்டன் டோணி மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக தெரிவித்ததாக ஹிந்தி பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.
இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு விளக்கம் அளித்த சுனில் தேவ், "இவை அனைத்தும் பொய். இந்த செய்தியை வெளியிட்ட ஹிந்தி நாளிதழ் மீது வழக்கு தொடர நான் திட்டமிட்டுள்ளேன்" என்றார்.
இந்நிலையில் அந்த பத்திரிகைக்கு விளக்கம் கேட்டு 9 பக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளார் டோணி. அந்த நோட்டீசில், ''அந்த செய்தியில் துளியளவும் உண்மையில்லை. என்னை அவமதிக்கும் வகையிலும் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. எனவே இந்த நோட்டீஸ் கிடைத்த 48 மணி நேரத்தில் மறுப்பு செய்தி வெளியிடவில்லையென்றால் ரூ. 100 கோடி இழப்பீடு கேட்டு மானநஷ்ட வழக்கு தொடருவேன்'' என்று கூறப்பட்டுள்ளது.