சர்வதேச போட்டிகளில் ஆடவில்லை
தோனி கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் கடைசியாக சர்வதேச போட்டியில் ஆடி இருந்தார். உலகக்கோப்பை தொடரின் அரை இறுதி தான் அவரின் கடைசி போட்டி. அதன் பின் அவர் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கவில்லை.
படுதீவிரமாக பயிற்சி செய்தார்
பிசிசிஐ அவரை வீரர்கள் ஒப்பந்தத்தில் இருந்தும் நீக்கியது. அதைத் தொடர்ந்து தோனி 2020 ஐபிஎல் தொடரில் ஆட தீவிர பயிற்சி மேற்கொண்டு இருந்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் நடத்திய பயிற்சி முகாமில் அவர் படுதீவிரமாக பயிற்சி செய்தார்.
2020 டி20 உலகக்கோப்பை
அதன் மூலம், தோனி இந்திய அணிக்கு திரும்ப முயற்சிப்பதாக ஒரு கருத்து நிலவியது. 2020 டி20 உலகக்கோப்பை தொடரில் கூட தோனி ஆட விரும்புகிறார் என சிலர் கூறினர். ஆனால், 2020 ஐபிஎல் தொடருக்கு கொரோனா வைரஸ் மூலம் சிக்கல் ஏற்பட்டது.
ஐபிஎல் தள்ளிவைப்பு
கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் அதிகரித்து லாக்டவுன் அறிவிக்கப்பட்ட நிலையில், 2020 ஐபிஎல் தொடர் கால வரையின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதனால், தோனியை மீண்டும் கிரிக்கெட் களத்தில் காண ஆவலாக இருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
ராஞ்சியில் தோனி
தோனி லாக்டவுன் காரணமாக தன் சொந்த ஊரான ராஞ்சியில் குடும்பத்துடன் இருந்து வருகிறார். இந்த நிலையில் அவர் ஆன்லைன் கிரிக்கெட் பயிற்சி அகாடமி துவங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
துபாயில் கிரிக்கெட் அகாடமி
தோனி முன்னதாக 2017இல் துபாயில் கிரிக்கெட் அகாடமி ஒன்றை துவக்கினார். அது ஒப்பந்த பிரச்சனை காரணமாக தற்போது மூடப்பட்டு உள்ளது. இந்த நிலையில், இந்த லாக்டவுன் நேரத்தில் ஆன்லைன் அகாடமி மூலம் பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளார் தோனி.
தலைமைப் பொறுப்பில் தோனி
தோனியின் பிராண்ட் மேனேஜ்மென்ட் நிறுவனமான ஆர்கா ஸ்போர்ட்ஸ் நிறுவனம் மூலம், இந்த ஆன்லைன் அகாடமி துவங்கப்பட உள்ளது. இதன் தலைமைப் பொறுப்பில் தோனி இருப்பார் என கூறப்பட்டுள்ளது. முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் உட்பட பல பயிற்சியாளர்களும் இந்த அகாடமியில் பணிபுரிய உள்ளனர்.
தோனி வழிநடத்துவார்
முன்னாள் தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன் டேரில் கல்லினன், மந்தார் தால்வி, சட்ரஜித் லாஹிரி உள்ளிட்ட பலரும் பயிற்சியாளர்களாக பணிபுரிய உள்ளனர். ஏற்கனவே, சிஎஸ்கே அணி மற்றும் ராஞ்சி மாநில அணி வீரர்களுக்கு ஆலோசகராக இருந்து வரும் தோனி, இந்த அகாடமியிலும் இளம் வீரர்களை வழிநடத்துவார் என கூறப்பட்டுள்ளது.
பயிற்சியாளர் தோனி?
துபாயில் உள்ள அகாடமியையும் விரைவில் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. தோனி இனி கிரிக்கெட் அணிகளுக்கு பயிற்சியாளராக மாறினாலும் ஆச்சரியம் இல்லை என்றே தோன்றுகிறது. 2020 ஐபிஎல் தொடருக்கு பின் அவர் தொடர்ந்து கிரிக்கெட் ஆடுவாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.