ராஞ்சி: இந்திய அணிக்குள் டோணிக்கு எதிராக நெருக்கடி அதிகரிக்கப்பட்டு, அவரது திறமை மழுங்கடிக்கப்பட்டு வருவதாக முன்னாள் பயிற்சியாளர் சஞ்சல் பட்டாச்சாரியா தெரிவித்தார்.
வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அடுத்தடுத்து இந்தியா தோல்வியடைந்துள்ள நிலையில், கேப்டன் பதவியில் இருந்து பதவி விலக தயார் என்று டோணி அறிவித்தார். சமீபத்தில்தான் டோணி, டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்து பதவி விலகிய நிலையில் டோணியின் இந்த அறிவிப்பு, இந்திய அணிக்குள் டோணிக்கு ஏதோ நெருக்கடி இருப்பதை உறுதி செய்வதாக அமைந்தது.

இந்நிலையில், டோணியின், முன்னாள் பயிற்சியாளர் சஞ்சல் பட்டாச்சார்யா இந்திய அணியில் பிளவு இருப்பதாக தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது: டோணி மிகுந்த நெருக்கடியில் சிக்கியுள்ளார். வீரர்களுக்கான ஓய்வு அறையில் உள்ள சூழலை சரி செய்ய அவர் கடினமாக போராடி இருக்கவேண்டும். ஆனால் சூழ்நிலை மோசமாக உள்ளது.
உலக கோப்பை போட்டிக்கு முன்பு இந்திய அணி மோசமான நிலையில் இருந்தது. அப்படிப்பட்ட அணியை வைத்துதான் டோணி அரை இறுதி வரை கொண்டு சென்றார். இதற்கு அவரது திறமையான செயல்பாடுதான் காரணம்.
வங்கதேச சுற்றுப்பயணத்தில் விளையாடி வரும் இந்திய அணியில் பிளவு இருந்தது. வீரர்கள் அறையில் ஒற்றுமை இல்லை. மாறுபட்ட சூழ்நிலை நிலவுகிறது. முதல் ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு டோணி என்னிடம் பேசினார். அணியில் உள்ள சீனியர் வீரர்களில் சிலர் எனக்கு ஆதரவு கொடுக்கவில்லை என்றார். அவர்கள் மீது டோணி கடும் அதிருப்தியில் உள்ளார்.
கடந்த சில மாதங்களாக இந்திய அணியின் சூழ்நிலை சரியில்லை. பயிற்சியாளர் பிளட்சரை டோணி இழந்து விட்டார். அவர் ஒரு சிறந்த பயிற்சியாளர். இருவருக்கும் இடையே உள்ள தொடர்பு முற்றிலும் வேறுப்பட்டது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். கோஹ்லி மற்றும் அவரது ஆதரவு வீரர்களே டோணிக்கு ஒத்துழைப்பு தராமல் மோசமாக ஆடுவதாக கூறப்படுகிறது.