ஓய்வில் தோனி
உலகக்கோப்பை தொடருக்கு பின் கிரிக்கெட்டில் இருந்து விலகி, தோனி தொடர்ந்து ஓய்வில் இருந்து வருகிறார். ஓய்வு நேரத்தை தன் குடும்பத்தினருடன் செலவிட்டு வரும் அவர், சமூக வலைதளங்களில் பதிவிடும் புகைப்படங்கள், வீடியோக்கள் மட்டுமே அவரது ரசிகர்களுக்கு ஆறுதலாக உள்ளது.
மீண்டும் ஆடுவாரா?
தோனி மீண்டும் இந்தியா அணி ஆடும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பாரா? என்ற கேள்விக்கு இதுவரை விடை கிடைக்கவில்லை. 2020 ஐபிஎல் தொடரில் மட்டுமே தோனி பங்கேற்க இருக்கிறார். இதற்கிடையே தோனி வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
மருத்துவ ஆலோசனை
சமீபத்தில் புட்டபர்த்தி சாய்பாபா ஆசிரமம் சென்ற தோனி, அங்கே இருக்கும் சிறப்பு மருத்துவமனைக்கு சென்றார். அங்கே விளையாட்டு மருத்துவத்தில் சிறப்பு நிபுணர் ஒருவரை சந்தித்து மீண்டும் கிரிக்கெட் களத்துக்கு திரும்புவது குறித்து ஆலோசனைகள் செய்தார் தோனி.
காட்டுக்குள் சுற்றுலா
இந்த நிலையில் தான் சுற்றுலா சென்ற போது எடுத்த புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் தளத்தில் பதிவிட்டார் தோனி. கன்ஹா தேசிய பூங்காவில் எடுத்த புலியின் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார். அந்த புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
இதுதான் முதல்முறை
ஜனவரி இறுதியில் தோனி, அவரது மனைவி சாக்ஷி மற்றும் நம்பர்கள் குழு கன்ஹா தேசிய பூங்காவுக்கு சென்றனர். முதன்முறையாக தோனி கன்ஹா தேசிய பூங்காவுக்கு வந்ததை குறித்து, அந்த பூங்காவின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஒரு இரவு அங்கேயே தங்கி இருந்தார் தோனி.
வெளியான புகைப்படங்கள்
தோனி கன்ஹா தேசிய பூங்காவுக்கு சென்றதை அறிந்த பலர், அவரை புகைப்படம் எடுத்து இணையத்தில் பகிர்ந்து வந்தனர். அந்த புகைப்படங்கள் அப்போதே ரசிகர்கள் மத்தியில் பரவியது. இந்த நிலையில், தோனி தானே எடுத்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
தோனி வெளியிட்ட புகைப்படம்
புலி ஒன்று ஓய்வு எடுத்துக் கொண்டு இருந்த போது அதை தோனி புகைப்படம் எடுத்துள்ளார். காட்டு விலங்குகளை புகைப்படம் எடுப்பது தனி கலையாக பார்க்கப்பட்டு வரும் நிலையில், தோனி தானும் ஒரு அரிய முயற்சியை செய்து இருந்தார்.
ரசிகர்கள் கொண்டாட்டம்
அந்த அழகான புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவியது. சில மணி நேரங்களில் கோடிக்கணக்கான பார்வையை பெற்று வியக்க வைத்தது. ரசிகர்கள் பலர் ஒரு புலியே, புலியை புகைப்படம் எடுத்துள்ளது எனக் கூறி தங்கள் தல தோனியை கொண்டாடி வருகின்றனர்.
2 கோடி லைக்குகள்
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் சுமார் 2 கோடி லைக்குகளை அள்ளிக் குவித்துள்ளது தோனியின் அந்த புகைப்படம். ஒரு புலியின் புகைப்படம் இத்தனை கோடி லைக்குகளை பெற்றுள்ளது பெரும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. தோனி ரசிகர்களால் தான் இது சாத்தியமானது.
புலியை தத்து எடுத்த தோனி
கடந்த 2011ஆம் ஆண்டு தோனி மைசூர் வனவிலங்கு காப்பகத்தில் ஒரு புலியை தத்து எடுத்தார். அந்த புலியின் பெயர் அகஸ்தியா ஆகும். அதன் பின் புலி பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளிலும் தோனி பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.