புட்டபர்த்தி சென்றார்
கடந்த செவ்வாய்க்கிழமை தோனி புட்டபர்த்தி சென்றார். இது வரை புட்டபர்த்தியில் இருக்கும் பிரசாந்தி நிலையம் எனும் சத்ய சாய்பாபா ஆசிரமத்துக்கு சென்று இருக்காத தோனி முதல் முறையாக அங்கே சென்றார். அங்கே தரிசனம் செய்த காட்சிகள் இணையத்தில் வெளியாகின.
தரிசனம்
தனிப்பட்ட விமானத்தில் தோனி பயணம் சென்றார். புட்டபர்த்தி விமான நிலையத்தில் இறங்கினார். காலையில் சாய் குல்வந்த் எனப்படும் இடத்தில் சத்ய சாய்பாபாவின் சமாதி உள்ளது. அங்கே சென்று தரிசனம் செய்தார் தோனி. பிறகு, அங்கிருந்து நேராக அருகே இருந்த சிறப்பு மருத்துவமனைக்கு விரைந்தார்.
யாரை சந்திக்க சென்றார்?
முதலில் அந்த சிறப்பு மருத்துவமனையை சுற்றிப் பார்க்கவே தோனி செல்கிறார் என கருதப்பட்டது. ஆனால், அங்கே முத்துக்குமார் என்ற மருத்துவரை சந்திக்கவே தோனி சென்றார். அந்த மருத்துவர் இந்திய கிரிக்கெட் அணிக்கான மருத்துவர் குழுவில் இடம் பெற்றுள்ளார்.
சிறப்பு மருத்துவ நிபுணர்
விளையாட்டு மருத்துவத்தில் சிறப்பு நிபுணரான அவர், லண்டனில் கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். புட்டபர்த்தி சிறப்பு மருத்துவமனைக்கு ஆண்டுக்கு இரண்டு முறை இலவச மருத்துவ சிகிச்சை அளிக்க வருவார். அந்த சந்தர்ப்பத்தில் தான் தோனி அவரிடம் ஆலோசனை பெற சென்றுள்ளார்.
தோனியின் காயங்கள்
தோனி கடந்த ஐபிஎல் தொடரில் முதுகில் நரம்பு தொடர்பான பிரச்சனை ஏற்பட்டு அவதிப்பட்டார். 2019 உலகக்கோப்பை தொடரில் கூட தோனி காயங்களுடன் தான் ஆடினார். அவரால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. உலகக்கோப்பை தொடருக்கு பின் அவர் இந்திய அணியில் இடம் பெறவில்லை.
ஒப்பந்தம் இல்லை
இடையே இந்திய அணியின் ஒப்பந்த வீரர்கள் பட்டியலில் இருந்தும் தோனி பெயர் நீக்கப்பட்டது. தோனி நீண்ட காலம் இந்திய அணியில் ஆடாததால் அவருக்கு பிசிசிஐ ஒப்பந்தம் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. தற்சமயம், தோனி அணியில் இடம் பெற வாய்ப்பு இல்லை என்ற நிலை தான் உள்ளது.
உடற்தகுதி தான் காரணம்
தோனி இந்திய அணியை விட்டு விலகி இருக்க அவருக்கு ஏற்பட்ட காயங்கள் மற்றும் அவரது உடற்தகுதி காரணமாக இருக்கலாம் என கூறப்பட்டது. இந்த நிலையில் தான் தோனி சிறப்பு விளையாட்டு மருத்துவர் முத்துக்குமாரை சந்தித்து இருக்கிறார்.
ஆலோசனை பெற்ற தோனி
தோனி சுமார் ஒரு மணி நேரம் வரை மருத்துவர் முத்துக்குமாரிடம் ஆலோசனை பெற்றதாக கூறப்படுகிறது. என்ன பிரச்சனைக்காக அவர் ஆலோசனை பெற்றார் என்பது தெரியவில்லை. அவர் தொடர்ந்து கிரிக்கெட் ஆடுவது பற்றி ஆலோசனை பெற்று இருக்கலாம் என கருதப்படுகிறது.
2020 ஐபிஎல்-இல் தோனி
தோனி 2020 ஐபிஎல் தொடரில் பங்கேற்க உள்ளார். அதற்காக சில வாரங்கள் முன்பு வலைப் பயிற்சியில் ஈடுபட்டார். 2020 ஐபிஎல் தொடரில் தோனி சிறப்பாக ஆடினால், அவர் இந்திய அணியில் இடம் பெற கடைசி வாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது.
சிஎஸ்கே உறுதி
ஆனால், தோனியின் உடற்தகுதி குறித்த பேச்சுக்கள் அதிகரித்து வரும் நிலையில், அவர் மீண்டும் அணியில் இடம் பெறுவது சந்தேகம் தான் என கூறப்படுகிறது. தோனி 2021 ஐபிஎல் தொடரிலும் ஆடுவார் என சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.