2019 உலகக்கோப்பை
2019 உலகக்கோப்பை தொடரில் உலகக்கோப்பை வெல்லும் அணிகளில் ஒன்றாக இந்திய அணி கருதப்பட்டது. எப்படியும் அரை இறுதிக்கு இந்திய அணி முன்னேறும் என அனைவரும் கூறியதைப் போலவே லீக் சுற்றில் அதிக புள்ளிகள் பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது.
மழை
அரை இறுதியில் நியூசிலாந்து அணியை சந்தித்தது. நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறாது என்றே பலரும் கருதினர். ஆனால், மழை எல்லாவற்றையும் மாற்றியது. ஜூலை 9, 2019 அன்று இந்தியா - நியூசிலாந்து அரை இறுதிப் போட்டி துவங்கியது.
மறுநாள்
நியூசிலாந்து அணி 46.1 ஓவர்களில் 211 ரன்கள் எடுத்து இருந்த போது மழை பெய்தது. அதைத் தொடர்ந்து போட்டி அடுத்த நாளைக்கு மாற்றப்பட்டது. உலகக்கோப்பை விதி முறைப்படி அரை இறுதிப் போட்டிகளுக்கு கூடுதல் நாள் இருந்ததால் அடுத்த நாளில் விட்ட இடத்தில் இருந்து போட்டி துவங்கியது.
ஆடுகளம்
ஆனால், இந்த முறை ஆடுகளம் மாறி இருந்தது. முதல் நாள் இருந்த ஆடுகளம் இப்போது இல்லை. மழையால் ஆடுகளம் ஈரப்பதமாக இருந்தது. பேட்டிங் செய்ய கடினமாக இருந்தது. நியூசிலாந்து அணி மீதமுள்ள ஓவர்களை ஆடியது. அந்த அணியால் 239 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
சறுக்கல்
அடுத்து ஆடிய இந்திய அணிக்கு முதல் மூன்று பேட்ஸ்மேன்களான ராகுல், ரோஹித் சர்மா, விராட் கோலி தலா 1 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். இந்தியா 5 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்தது. அப்போதே தோனியால் மட்டுமே இந்த போட்டியை காப்பாற்ற முடியும் என்ற நிலை வந்தது.
அதிர்ச்சி
ஆனால், ஐந்தாவது விக்கெட்டுக்கு தோனியை அனுப்பாமல் தினேஷ் கார்த்திக்கை அனுப்பி அதிர்ச்சி அளித்தது இந்திய அணி நிர்வாகம். அதன் பின்னும் தோனி வரவில்லை அதிரடி வீரர் ஹர்திக் பாண்டியா களமிறங்கினார். தோனி ஏழாவது பேட்ஸ்மேனாக ஆட வந்தார்.
ஜடேஜா - தோனி
இந்தியா அப்போது 71 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து இருந்தது. பாண்டியா 32 ரன்களில் வெளியேறினார். அடுத்து ஜடேஜா - தோனி இணைந்து 7வது விக்கெட்டுக்கு அருமையான கூட்டணி அமைத்தனர். அவர்கள் இருவரும் சேர்ந்து 116 ரன்கள் குவித்தனர்.
ஜடேஜா அவுட்
ஜடேஜா 48வது ஓவரில் 59 பந்துகளில் 77 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது தோனி மட்டுமே களத்தில் நம்பிக்கை அளித்து வந்தார். 49வது ஓவரில் மார்ட்டின் கப்தில்-இன் துல்லிய த்ரோவில் தோனி ரன் அவுட் ஆனார்.
கண் கலங்கியபடி சென்றார்
அத்துடன் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பறிபோனது. தோனி ஆட்டமிழந்து வெளியேறிய போது கண் கலங்கியபடி சென்றார். இந்தியா 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
ஒரே ஆறுதல்
அந்தப் போட்டியில் இந்திய அணியின் தோல்வியால் ரசிகர்கள் மனம் உடைந்தனர். அவர்களின் ஒரே ஆறுதலாக இருந்தது ஜடேஜாவின் அட்டகாசமான ஆட்டம் தான். தோல்வி என உறுதியான போட்டியை வெற்றிக்கு அருகே அழைத்து வந்தது அவரது ஆட்டம் தான்.