தல தோனி
"தல" தோனி என அவருக்கு பெயர் வந்ததற்கு காரணம் தோனி இந்திய அணியில் ஆடியது அல்ல. சிஎஸ்கே அணியில் ஆடியது தான். தமிழக ரசிகர்கள் தான் தல என்ற அடைமொழியை தோனிக்கு அளித்தார்கள். தமிழ்நாட்டு ரசிகர்களுக்கும், தோனிக்கும் ஒரு இணைபிரியாத பந்தம் உள்ளது.
தோனி - சிஎஸ்கே பந்தம்
அதே போல, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், தோனிக்கும் இடையே உள்ள பந்தமும் உறுதியானது. சிஎஸ்கே அணியில் தோனிக்கு முழு சுதந்திரம் உண்டு. அவரை சுற்றியே ஒட்டுமொத்த அணியும் இயங்கும். தோனி ஓய்வு பெற்றாலும் கூட சிஎஸ்கே அணியின் பயிற்சியாளராக, ஆலோசகராக இருப்பார் என கூறப்படுவது உண்டு.
ஐபிஎல் கோப்பை
தோனி கேப்டன்சியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை அனைத்து ஐபிஎல் சீசன்களிலும் முதல் நான்கு இடங்களுக்குள் இடம் பெற்றுள்ளது. ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி மட்டுமே இந்த சாதனையை செய்துள்ளது. மூன்று முறை ஐபிஎல் கோப்பையும் வென்றுள்ளது.
சிறந்த கேப்டன்
ஐபிஎல் தொடரில் சிறந்த கேப்டன் தோனிதான் என பலரும் கூறி உள்ளனர். எப்படிப்பட்ட அணியாக இருந்தாலும் சமாளித்து பிளே-ஆஃப் வரை அழைத்துச் சென்று இருக்கிறார். 2020 ஐபிஎல் தொடரிலும் தோனியைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
என்ன தகவல்?
இந்த நிலையில், தோனியின் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்டார் ஸ்போர்ட்ஸ்-இல் வெளியான நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி, இன்னும் 10 ஆண்டுகளில் தோனி சிஎஸ்கே அணியின் "பாஸ்" ஆக, நிரந்தரமாக அணியில் இணைந்து இருப்பார் எனக் கூறினார்.
நெருக்கமானவர்
அதாவது சிஎஸ்கே அணியின் உரிமையாளர்களில் ஒருவராக தோனி மாறுவார் எனக் கூறி உள்ளார். காசி விஸ்வநாதன், தற்போதைய சிஎஸ்கே அணி உரிமையாளர் சீனிவாசனுக்கு நெருக்கமானவர். அவரே இப்படி கூறி இருப்பது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
எப்படி சாத்தியம்?
இது எப்படி சாத்தியம்? தோனி எப்படி சிஎஸ்கே அணியின் உரிமையாளர் ஆக முடியும்? தோனிக்கு சிஎஸ்கே அணியின் பங்குகளை விற்பதன் மூலம் இது சாத்தியம் ஆகும். அவருக்கு குறிப்பிட்ட சதவீதத்தில் பங்குகளை அளித்தால் அவரும் சிஎஸ்கே அணியின் உரிமையாளர்களில் ஒருவராக மாறலாம்.
ரசிகர்கள் கொண்டாட்டம்
அதைத் தான் காசி விஸ்வநாதன் கூறி இருக்கக் கூடும். அடுத்த 10 ஆண்டுகளில் தோனி சிஎஸ்கே அணியின் பாஸ் ஆகப் போகிறார் என்ற இந்த தகவலை தோனி ரசிகர்கள் அதிக அளவில் பகிர்ந்து வருகிறார்கள்.