
விசாகப்பட்டிணம் போட்டி
2006ம் ஆண்டு விசாகப்பட்டணத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின்போது 147 ரன்களைக் குவித்து தனது வருகையை அறிவித்தார் தோனி. அன்று முதல் அவரது அதிரடி சாகசங்கள் தொடர் கதையாகின. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக உருவெடுத்த தோனி, 3வது நிலை வீரராக அப்போதைய கேப்டனாக இருந்த கங்குலியால் பயன்படுத்தப்பட்டார்.

அசகாய தோனி
3வது நிலை வீரராக தோனி அசகாயம் புரிந்தார். ஒவ்வொரு முறை பேட்டிங் செய்தபோதும் பந்துகளை சிதற விட்டார். வரலாறு படைத்தார். இந்தியாவுக்குக் கிடைத்த கில்கிறிஸ்ட் என்று தோனிக்கு சர்வதேச மீடியாக்கள் புகழாரம் சூட்டின. நடுக்களத்தில் நம்பகமான ஒரு வீரராக அவர் உருவெடுத்தார். அதேசமயம், மேட்ச்சை சிறப்பாக முடிக்கக் கூடியவர் என்ற பெயரையும் தோனி பெற்றார்.

அருமையான ஆட்டம்
இலங்கைக்கு எதிராக சேசிங்கில் அவர் எடுத்த 183 ரன்கள்தான் அவரது பெஸ்ட் ஸ்கோர். 2007ம் ஆண்டு தோனி கேப்டன் பதவிக்கு வந்தார். பதவிக்கு வந்ததும் தனது பேட்டிங் ஆர்டரை மாற்றினார். 3வது நிலையிலிருந்து 5வது நிலைக்கும் பின்னர் 7வது நிலைக்கும் தன்னை மாற்றிக் கொண்டார். அணியின் போட்டிகளை முடிக்கும் பினிஷராக தன்னை மாற்றிக் கொண்டார். இது நல்ல பலனையும் கொடுத்தது என்பதால் ரசிகர்களும் வரவேற்றனர்.

3வது நிலையில் ஆடியிருக்கலாம்
5 மற்றும் 7வது நிலை வீரராக இறங்கினாலும் கூட தோனி விருந்து படைக்கத் தவறியதில்லை. அந்த நிலையில் இருந்தபடி 350 ஒரு நாள் போட்டிகளில் அவர் ஆடியுள்ளார். 10,773 ரன்களைக் குவித்துள்ளார். சராசரி 50 பிளஸ் ஆகும். இங்குதான் கம்பீர் ஒரு கருத்தை முன்வைக்கிறார். தோனியின் கடைநிலை வரிசை பேட்டிங்கில் குறை சொல்ல முடியாவிட்டாலும் கூட 3வது நிலையில் அவர் தொடர்ந்து விளையாடியிருந்தால் பல பேட்டிங் சாதனைகளை முறியடித்திருப்பார் என்று சொல்கிறார் கம்பீர்.

புது வரலாறு கிடைத்திருக்கும்
இதுகுறித்து கம்பீர் கூறுகையில், தோனி 3வது நிலையில் அதிகம் விளையாடவில்லை. ஆனால் அவர் தொடர்ந்து அந்த இடத்தில் ஆடியிருந்தால் நிச்சயம் பல சாதனைகள் படைத்திருப்பார். பல சாதனைகளை முறியடித்திருப்பார். ஆனால் அவர் அதைச் செய்யவில்லை. அதை அவர் செய்திருக்கலாம். செய்திருந்தால் முற்றிலும் வேறு லெவல் வீரராக அவர் சர்வதேச கிரிக்கெட்டில் உருவெடுத்திருப்பார் என்று கூறியுள்ளார் கம்பீர்.


Click it and Unblock the Notifications