மும்பை: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி அடைந்தது. அதன் பிறகு தோனி பேசுகையில், 2026 ஐபிஎல் தொடருக்கு சிஎஸ்கே அணியைத் தயார் செய்வது பற்றிப் பேசினார். இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் மனம் உடைந்து போயுள்ளனர்.
இந்த சீசனில் இன்னும் ஆறு போட்டிகள் மீதமிருக்கும் நிலையில், இப்போது தோனி அடுத்த சீசனுக்கு தயார் ஆவது பற்றிப் பேசுகிறார் என்றால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த அளவுக்கு விளையாடுகிறது என அவர்கள் வேதனையுடன் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த ஆண்டு பிளே ஆஃபிற்கு சிஎஸ்கே முன்னேறாது என அணியின் கேப்டன் தோனியே தெளிவாகக் கூறிவிட்டார் என ரசிகர்கள் கருதுகின்றனர். அடுத்த ஆறு போட்டிகளிலும் வென்றால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும். ஆனால், அதற்கான முயற்சியை கூட தோனி எடுக்கவில்லை என அவர்கள் தங்கள் மனவேதனையை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. எளிதாக பேட்டிங் செய்யக்கூடிய மும்பை வான்கடே மைதானத்தில் சிஎஸ்கே அணி எடுத்த 176 என்பது மிக மிகக் குறைவான ஸ்கோர் தான்.
7வது ஓவர் முதல் 14வது ஓவர் வரை சிஎஸ்கே அணி ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை. அந்த அளவுக்கு மந்தமான ஆட்டத்தை தான் வெளிப்படுத்தி இருந்தது. சிவம் துபே மற்றும் ரவீந்திர ஜடேஜா இந்த போட்டியில் அரை சதம் அடித்தாலும், அவர்கள் இடைப்பட்ட ஓவர்களில் பல பந்துகளை வீணடித்தனர், பவுண்டரி அடிக்க முடியாமல் திணறினார்கள். கடைசி சில ஓவர்களில் தான் அதிரடி ஆட்டத்தை ஆடினர். இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 177 ரன்கள் என்ற இலக்கை 15.4 ஓவர்களிலேயே எட்டியது.
தோல்விக்குப் பிறகு தோனி பேசுகையில், "எங்களுக்கு இருக்கும் போட்டிகள் ஒவ்வொன்றையும் நாங்கள் வெற்றி பெற முயற்சிப்போம். ஒரு நேரத்தில் ஒரு போட்டியை மட்டுமே நாங்கள் எடுத்துக் கொண்டு விளையாடுவோம். சில போட்டிகளில் நாங்கள் தோல்வியடைந்தால், எங்களுக்கு அடுத்த ஆண்டுக்கான சரியான அணி எது என்பதைத் தேர்வு செய்வது மிகவும் முக்கியம். நிறைய வீரர்களை மாற்றவும் கூடாது. பிளே ஆஃப் செல்ல முயற்சிப்போம். முடியவில்லை என்றால், அடுத்த ஆண்டுக்கான 11 வீரர்கள் யார் என்பதை முடிவு செய்வோம்" என்றார்.
அவரது இந்த பேச்சு ரசிகர்களை மேலும் சோர்வடைய வைத்துள்ளது. சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக விலகிய பின் தோனி கேப்டன் ஆன போது சிஎஸ்கே அணி வெற்றிகளை குவிக்கும் என நினைத்த ரசிகர்களுக்கு தோனி இப்படி பேசி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இப்போதே தோனி அடுத்த ஆண்டுக்கான வீரர்களைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த உள்ளதாகச் சொல்லி இருக்கிறார். ஆனால், சிஎஸ்கே அணி இப்போது இருக்கும் நிலையில், ஒட்டுமொத்த அணியையும் கலைத்துவிட்டு, 2026 ஐபிஎல் ஏலத்தில் இளம் வீரர்கள் அடங்கிய புதிய அணியைத் தேர்வு செய்ய வேண்டும் எனவும் சில ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த அளவுக்கு சிஎஸ்கே அணி மிக மோசமாக விளையாடி உள்ளது. மேலும், தோனி உட்பட பல மூத்த வீரர்கள் மிகவும் மோசமாக விளையாடி வருவதைச் சுட்டிக்காட்டி, இனி சிஎஸ்கே இளம் தலைமுறை நோக்கி நகர வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.