சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, சமீபத்தில் நடந்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்கு முன் தனது அடுத்த போட்டி குறித்து வேடிக்கையாகச் சொன்ன கருத்தும், போட்டி முடிந்த பிறகு சிஎஸ்கே நிர்வாகத்துடன் அவர் நீண்ட நேரம் உரையாடிய காட்சிகளும் ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதத்தையும் ஊகங்களையும் எழுப்பியுள்ளன.
நடப்பு 2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் இரண்டு வெற்றிகளையும் எட்டு தோல்விகளையும் சந்தித்து, பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பையும் இழந்து பரிதாப நிலையில் உள்ளது.

இந்தப் போட்டிக்கு முன்னதாக டாஸ் போடும் நிகழ்வின் போது, வர்ணனையாளர் டேனி மாரிசன் தோனியிடம் விளையாட்டாக "நீங்கள் இந்த சீசன் உடன் ஓய்வு பெறப் போகிறீர்களா?" எனக் கேட்டார். அதற்குப் பதிலளித்த தோனி, "நான் அடுத்த போட்டியில் விளையாடுவதே சந்தேகம் தான்" என சிரித்துக்கொண்டே சொன்னார்.
தோனி அதை வேடிக்கையாகச் சொன்னாரா அல்லது ஏதேனும் காயம் ஏற்பட்டதால் அடுத்த போட்டியில் விளையாட முடியாத நிலையில் இருக்கிறாரா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
இந்த நிலையில் தான், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்து, 2025 ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பையும் இழந்த பிறகு, தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் ரூபா குருநாத் மற்றும் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் ஆகியோருடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன.
அவர்கள் சிரித்துக்கொண்டே பேசிக் கொண்டிருந்தனர். ஆனாலும், இந்தப் பேச்சுவார்த்தை குறித்து ரசிகர்கள் தங்கள் ஊகங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்தப் போட்டியுடன் தோனி விளையாடுவதை நிறுத்திக்கொள்வார் என சிலர் கூறி வருகின்றனர். சிலரோ, தோனி 2026 ஐபிஎல் தொடரிலும் விளையாடுவார் என்றும், இந்த ஆண்டு ஏற்பட்ட தோல்வியை அடுத்த ஆண்டு ஈடுகட்டுவார் என்றும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். தோனியின் அடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.