சென்னை: 2025 ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாட உள்ள நிலையில், தோனி இந்த போட்டியுடன் ஓய்வு பெற இருப்பதாக தகவல் பரவியது. முதன்முறையாக தோனி விளையாடும் போட்டியை அவரது பெற்றோர் நேரில் காண வந்தனர். அதனால் இது போன்ற தகவல் பரவியது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி சுமார் 16 ஆண்டுகளாக விளையாடி வரும் நிலையில், இதுவரை அவரது பெற்றோர் மைதானத்தில் நேரில் வந்து தோனி விளையாடிய போட்டியை பார்த்ததில்லை என கூறப்படுகிறது. முதன்முறையாக அவரது பெற்றோர் சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு நேரில் வருகை தந்தனர்.

இதை அடுத்து தோனி தனது ஐபிஎல் ஓய்வை அறிவிக்க போகிறாரா? என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. தீவிரமான தோனி மற்றும் சிஎஸ்கே ரசிகர்கள் "தயவு செய்து இன்று ஓய்வை அறிவித்து விடாதீர்கள் தோனி" என சமூக வலைதளங்களில் பல்வேறு உருக்கமான பதிவுகளையும் வெளியிட்டனர்.
இந்த போட்டியின் இடையே தோனி ஓய்வு அறிவிப்பதற்கான சாத்திய கூறுகள் உள்ளனவா? என்று பலரும் இரண்டு காரணங்களை கூறினர். சில ஆண்டுகளுக்கு முன்பு தோனி ஒரு விஷயத்தை அறிவித்திருந்தார். தான் ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக இருந்தால் நிச்சயமாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தான் தனது கடைசி போட்டியில் ஆடுவேன் என்று சொல்லி இருந்தார். அதன்படி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தான் நடைபெற்றது.
அடுத்து மற்றொரு விஷயமும் உள்ளது. தோனி 2025 ஐபிஎல் தொடரின் இடையே ஓய்வு பெற்றால் சிஎஸ்கே அணி மாற்று வீரர் ஒருவரை உடனடியாக தேர்வு செய்ய வேண்டும். சில நாட்களுக்கு முன்பு 17 வயதான ஆயுஷ் மாத்ரே என்ற மும்பை வீரரை சிஎஸ்கே அணி தங்களுடன் வலைப்பயிற்சி செய்ய அழைப்பு விடுத்திருந்தது.
எந்த மாற்று வீரருக்கான தேவையும் இல்லாத போது அந்த 17 வயது வீரரை அழைக்க வேண்டிய அவசியம் என்ன? என அப்போது கேள்வி எழுந்தது. தற்போது தோனி ஒருவேளை ஓய்வை அறிவித்தால் ஆயுஷ் மாத்ரே அவருக்கு மாற்று வீரராக சிஎஸ்கே அணியில் இணைய வாய்ப்பு உள்ளது. இந்த ஒப்பீடுகளை வைத்து ரசிகர்கள் தங்கள் சந்தேகத்தை எழுப்பி, தோனி ஓய்வு பெறக் கூடாது என தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
தற்போதைய நிலவரம் - சமூக வலைதளங்களில் தோனியின் பெற்றோர் வருகையால் அவர் ஓய்வை அறிவிக்கப் போவதாக பரபரப்பு எழுந்த நிலையில், அது போன்ற எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்தப் போட்டியில் தோனி பேட்டிங் செய்து 26 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார். சிஎஸ்கே அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. போட்டி முடிந்த பின் தோனி குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.