அஸ்வினுக்கு ஏற்பட்ட ஏல அவமானம்.. காரணமே இதுதான்.. சரமாரியாக விளாசிய முன்னாள் நியூசிலாந்து வீரர்
சென்னை: முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், ஐக்கிய அரபு அமீரகத்தின் ஐ.எல்.டி20 (ILT20) தொடரின் ஏலத்தில் தனது பெயரை பதிவிட்டு இருந்தார். ஆனால், புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில், $120,000 (சுமார் 1 கோடி ரூபாய்) என்ற அதிகபட்ச அடிப்படை விலைப் பிரிவில் அஸ்வினின் பெயர் இடம்பெற்றபோது, அவரை வாங்குவதற்கு ஒரு அணி கூட முன்வராதது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
39 வயதான அஸ்வின் நிச்சயம் ஏலத்தில் எடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு ஏற்பட்ட இந்த நிலை ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதேநேரத்தில், மற்ற முன்னாள் இந்திய வீரர்களான தினேஷ் கார்த்திக்கை ஷார்ஜா வாரியர்ஸ் அணியும், பியூஷ் சாவ்லாவை அபுதாபி நைட் ரைடர்ஸ் அணியும் ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

அஸ்வின் விலகல் வதந்தி
அஸ்வின் ஏலத்தில் எடுக்கப்படாததற்கு அவரது அதிகப்படியான அடிப்படை விலை ஒரு காரணமாகக் கூறப்பட்டாலும், மற்றொரு முக்கியக் காரணம், இந்தத் தொடர் நடைபெறும் அதே காலகட்டத்தில் ஆஸ்திரேலியாவில் பிக் பேஷ் லீக் (BBL) தொடரும் நடைபெறுவதுதான். அந்தத் தொடரில் சிட்னி தண்டர் அணிக்காக அஸ்வின் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ஆனால், இந்த விவகாரத்தில் ஒரு புதிய திருப்பமாக, ஏலத்தில் தனது பெயர் வருவதற்குச் சற்று முன்பு, அஸ்வின் கடைசி நேரத்தில் போட்டியிலிருந்து தன்னைத் தானே விலக்கிக் கொண்டிருக்கலாம் என்றும் ஒரு தகவல் வெளியாகி, சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அதனால் தான் அஸ்வினை ஏலத்தில் வாங்கலாம் என்று திட்டமிட்டு இருந்த ஐஎல்டி20 அணிகள் கடைசி நேரத்தில் அவர் பெயர் வந்தபோது ஏலம் கேட்கவில்லை என கூறப்படுகிறது.
சைமன் டௌல் விமர்சனம்
இந்த வதந்தியை மையமாக வைத்து, நியூசிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், தற்போதைய வர்ணனையாளருமான சைமன் டௌல், அஸ்வினின் இந்தச் செயலைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
"அஸ்வின் ஏலத்திலிருந்து விலகியிருக்கலாம் என்று நாங்கள் கேள்விப்படுகிறோம், இது மிகப்பெரிய ஆச்சரியம். ஒரு வீரர், ஏலம் நடைபெறும் அறையின் சூழலைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்," என்று அவர் வர்ணனையின்போது குறிப்பிட்டார். ஏலத்தின்போது பல அணிகளிடம் போதுமான பணம் இருந்ததை அஸ்வின் கணிக்கத் தவறிவிட்டார் என்றும் டௌல் சுட்டிக்காட்டினார்.
"ஏலத்தின்போது என்ன நடக்கிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். மூன்று, நான்கு அணிகளிடம் $400,000-க்கும் அதிகமான தொகை மீதமிருந்தது. அவர்கள் பணத்தைச் செலவழிக்காமல் இருப்பதற்காக இங்கு வரவில்லை, அதைச் செலவழிப்பதற்காகவே வந்துள்ளனர். ஒருவேளை அஸ்வின் உண்மையிலேயே தன்னை விலக்கிக் கொண்டிருந்தால், அவர் ஏலத்தின் சூழலைச் சரியாகப் புரிந்துகொள்ளத் தவறிவிட்டார் என்றே அர்த்தம். அவர் மட்டும் இருந்திருந்தால், நிச்சயம் அணிகள் அவருக்காகப் போட்டி போட்டிருக்கும்" என்று சைமன் டௌல் தனது கருத்தைத் தெரிவித்தார்.
பிக் பேஷ் மற்றும் பிற வாய்ப்புகள்
கடந்த ஆகஸ்ட் மாதம் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, அஸ்வின் உலகின் பல்வேறு டி20 லீக்குகளில் விளையாடத் தகுதி பெற்றார். இதன் காரணமாக, ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் பங்குபெறும் ஐ.எல்.டி20 ஏலத்தில் அவர் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டார். ஆஸ்திரேலியாவின் பிக் பேஷ் லீக்கில் விளையாடும் முதல் உயர்மட்ட இந்திய வீரர் என்ற பெருமையை அவர் விரைவில் பெறவுள்ளார். இதுமட்டுமல்லாமல், நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஹாங்காங் சிக்ஸஸ் தொடரிலும் இந்திய அணிக்காக அஸ்வின் களமிறங்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications