பிசிசிஐயில் இருந்து நீக்கப்படலாம்
கங்குலி பிசிசிஐ தலைவரான போதே அவர் பதவிக்கு வருவதை விரும்பாத பலரும், அவருக்கு எதிராக பேசி வந்த சிலரும் பிசிசிஐயில் இருந்து நீக்கப்படலாம் என கூறப்பட்டது. குறிப்பாக இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி குறித்து தான் அப்போது அதிகம் பேசப்பட்டது.
அனில் கும்ப்ளே நியமனம்
முன்பு அனில் கும்ப்ளேவை இந்திய அணி பயிற்சியாளராக நியமித்ததில் கங்குலியின் பங்கு இருந்ததால், ரவி சாஸ்திரி கங்குலியை எதிர்த்து அப்போது கடுமையாக பேட்டி அளித்து வந்தார். அதன் பின் அனில் கும்ப்ளே நீக்கப்பட்டு, ரவி சாஸ்திரி மீண்டும் பயிற்சியாளராக வந்தார்.
ரவி சாஸ்திரி பேச்சு
அதன் பின் கங்குலி - ரவி சாஸ்திரி இருவரும் எலியும், பூனையுமாகவே இருந்தனர். ஒரு முறை ரவி சாஸ்திரி கடந்த 15 - 20 ஆண்டுகளில் சிறந்த டெஸ்ட் அணி விராட் கோலி தலைமையிலான அணி தான் என கூறி இருந்தார்.
பிசிசிஐ தலைவர் ஆனார் கங்குலி
அவர் மறைமுகமாக கங்குலியை சாடுவதாகவே அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. கங்குலி அப்போது எந்த பதிலடியும் கொடுக்கவில்லை. அதன் பின் பிசிசிஐ தலைவர் பதவிக்கு கங்குலி போட்டி இன்றி தேர்வு செய்யப்பட்டார்.
ரவி சாஸ்திரிக்கு குறி?
அப்போதே ரவி சாஸ்திரியை கட்டம் கட்டி கங்குலி நீக்கி விடுவார் என்றார்கள். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. கங்குலி, தன் சொந்த விஷயத்தை பிசிசிஐக்குள் எடுத்து வர மாட்டார் என்றே நம்பப்பட்டது. ஆனால், சஞ்சய் மஞ்ச்ரேக்கர் விவகாரம் சந்தேகத்தை கிளப்பி உள்ளது.
கிண்டல்
சஞ்சய் மஞ்ச்ரேக்கர் - சௌரவ் கங்குலி இடையே லேசான கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தது. இருவரும் தொலைக்காட்சி வர்ணனையில் ஒன்றாக அமர்ந்து பேசினாலும், இருவரும் ஒருவரை ஒருவர் கிண்டல் செய்து கொள்வர்.
இரட்டை ஆதாய சர்ச்சை
சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பிசிசிஐ தலைவர் பதவிக்கு கங்குலி போட்டியிட உள்ளதாக தகவல் வந்த போது, அவரது இரட்டை ஆதாய சர்ச்சை பற்றி பேசி இருந்தார். இந்த நிலையில், கடந்த மாதம் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பிசிசிஐ வர்ணனையாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
கசிந்த தகவல்
அப்போது அதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டது. ஆனால், பிசிசிஐயை சேர்ந்த பெயர் கூற விரும்பாத ஒருவர் கங்குலி பதவி ஏற்கும் முன் அதைப் பற்றி சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பேசியதால் தான் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக கூறி அதிர்ச்சி அளித்தார்.
இது உண்மையல்ல
அவர் கூறுவது உண்மை என்றால், கங்குலி தன்னை எதிர்த்து கருத்து கூறியதால் தான் கட்டம் கட்டி மஞ்ச்ரேக்கரை நீக்கி இருக்க வேண்டும். ஆனால், கங்குலி தனக்கு பிடிக்காதவர்களை பதவி நீக்கம் செய்து வருவதாக வரும் தகவல்கள் உண்மையல்ல என்றும் அவர் கூறி உள்ளார்.
அடக்கி வாசிக்கும் ரவி சாஸ்திரி
ரவி சாஸ்திரிக்கு தான் கங்குலி குறி வைப்பார் என கூறப்பட்ட நிலையில், சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பதவி இழந்துள்ளார். கங்குலி தலைவர் ஆகும் முன் அடிக்கடி ஊடகங்களில் சர்ச்சை பேட்டிகளை அளித்து வந்த ரவி சாஸ்திரி, தற்போது அடக்கி வாசிப்பதும் குறிப்பிடத்தக்கது.