
நியாயமான காரணம்
இங்கிலாந்து தொடரில் இதுவரை 3 போட்டிகள் நடைபெற்றுள்ளன. நான்காவது போட்டி நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், இதில் எந்த போட்டியிலும் அஷ்வின் சேர்க்கப்படவில்லை. அதற்கும் காரணமாக, கேப்டன் விராட் கோலி அதிகம் சொன்னது, "வெற்றிப் பெற்ற பிளேயிங் லெவனை மாற்ற தேவையில்லை" என்பது தான். அது உண்மையும் கூட. எந்த கேப்டனும், வெற்றிப் பெறும் ஒரு அணியை மாற்ற நினைக்க மாட்டார். அந்த வகையில் விராட் கோலியின் காரணமும் நியாயமானது தான்.

ஸ்பின் சப்போர்ட் பிட்ச்
ஆனால், ஒவ்வொரு போட்டியிலும் அஷ்வின் டிராப் செய்யப்படும் போதும் முன்னாள் கிரிக்கெட்டர்கள் பலரும் தொடர்ந்து தங்கள் விமர்சனங்களை முன்வைத்தனர்.. தொடர்ந்து வைத்தும் வருகின்றனர். குறிப்பாக, இந்த லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில், ஏன் அஷ்வினை சேர்க்கவில்லை? என்பதே பலரின் கேள்வியாக அமைந்தது. ஏனெனில், இந்த பிட்ச் விளையாட விளையாட மெதுவாக மாறும் தன்மை கொண்டது. குறிப்பாக, கடைசி 2 நாட்களில் இந்த பிட்சில் வேகப்பந்து வீச்சு பெரிதாக கைக்கொடுக்காது என்றும் சுழற் பந்துவீச்சாளர்களால் ஆதிக்கம் செலுத்த முடியும் என்று முன்பே கணிக்கப்பட்டது. இதனால், இந்திய அணியின் அஷ்வின் நிச்சயம் சேர்க்கப்படுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

எதிர்கொள்ள தயார்
இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் கூட, "இந்த போட்டியில் அஷ்வின் விளையாடுவார் என்று தெரியும்; அவரை சமாளிக்க தேவையான அனைத்து வியூகங்களையும் வகுத்துள்ளோம். அவரை எதிர்கொள்ள தயார்" என்று கூறியிருந்தார். ஆனால் அஷ்வின் சேர்க்கப்படவில்லை. இத்தனைக்கும் இந்திய அணி 3வது டெஸ்ட்டில் தோல்வி அடைந்திருந்தது. அப்போதும் அஷ்வின் சேர்க்கப்படவில்லை. இந்த சூழலில் தான் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 466 ரன்கள் குவித்து, இங்கிலாந்துக்கு 368 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. இங்கிலாந்தை கட்டுப்படுத்த இந்த ஸ்கோர் போதும் என்று எக்ஸ்பெர்ட்ஸ் கூறிய நிலையில், இங்கிலாந்து நேற்று ஒரு விக்கெட்டை கூட இழக்காமல் 77 ரன்களை அடித்து, இந்தியாவுக்கு எச்சரிக்கை மணி அடித்திருக்கிறது.

சீரியஸ் அஷ்வின்
ஒருவேளை அஷ்வின் இருந்திருந்தால், நிச்சயம் நேற்று இந்திய அணி அட்லீஸ்ட் ஒரு விக்கெட்டாவது எடுத்திருக்கலாம். அதற்காக ஜடேஜா பவுலிங்கை குறை சொல்லவில்லை. நேற்று 13 ஓவர்கள் வீசினார். அவரால் எவ்வளவு சிறப்பாக வீச முடியுமோ, அவ்வளவு சிறப்பாக வீசினார். ஆனால், விக்கெட் வீழ்த்த முடியவில்லை, இங்கிலாந்து ஓப்பனர்களை தகர்க்க இந்தியா தள்ளாடியது. விராட் கோலி தவித்தார். இங்கிலாந்து டிரெஸ்ஸிங் ரூம் ரசித்தது. அப்போது, கேமராக்கள் அனைத்தும் மொய்த்தது அஷ்வின் முகத்தை தான். ஆம்! போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த போது, பெவிலியனில் அமைதியாக உட்கார்ந்திருந்த அஷ்வின், போட்டியை மிக சீரியஸாக பார்த்துக் கொண்டே இருந்தார். "என்னை சேர்க்கலைல.. அனுபவிங்க" என்பதே நிச்சயம் அவரது மைண்ட் வாய்ஸாக இருந்திருக்கும். அந்த புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகிறது. ஒருவேளை, இன்று ஜடேஜாவால் தாக்கம் ஏற்ப்டுத்தவில்லை என்றாலோ, இந்தியா தோல்வி அடைந்தாலோ நிச்சயம் பதில் சொல்ல வேண்டியது கேப்டன் விராட் கோலி தான். ஆனால், அதற்காக ஐந்தாவது டெஸ்ட் போட்டியில், அஷ்வின் விளையாடினால் தான் இந்தியா ஜெயிக்குமா? என்றால், சத்தியமாக கிடையாது. ஆனால், இந்த நான்காவது டெஸ்ட்டில், பிட்ச் நிச்சயம் ஸ்பின்னுக்கு ஒத்துழைக்கும் என்று தெரிந்திருந்தும் அஷ்வின் சேர்க்கப்படவில்லை. இன்றைய போட்டியின் முடிவை பொறுத்து, இந்த விவகாரம் காரசாரமாக விவாதிக்கப்படலாம்.


Click it and Unblock the Notifications











