சுரேஷ் ரெய்னா நிலை
சுரேஷ் ரெய்னா நீண்ட காலம் இந்திய ஒருநாள் அணி மற்றும் டி20 அணியில் இடம் பெற்று இருந்தார். 226 ஒருநாள் போட்டிகள் மற்றும் 78 டி20 போட்டிகளில் ஆடி இருந்தார் சுரேஷ் ரெய்னா. இடையே சில தொடர்களில் அவர் நீக்கப்பட்டார்.
கடைசி தொடர் இதுதான்!
பின் மீண்டும் அணியில் இடம் பெற்ற அவர் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இடம் பெற்றார். அதில் அவர் சில போட்டிகளில் மட்டும் சராசரியாக ரன் குவித்தார். அந்த தொடருக்கு பின் அவர் இந்திய அணியில் தேர்வு செய்யப்படவில்லை.
உள்ளூர் போட்டிகள் செயல்பாடு
அதன் பின் உள்ளூர் போட்டிகள் மற்றும் 2019 ஐபிஎல் தொடரில் சுரேஷ் ரெய்னா பங்கேற்றார். உள்ளூர் போட்டிகளில் ஓரளவு ரன் எடுத்திருந்தாலும், ஐபிஎல் தொடரில் அவரால் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. அதனால், மீண்டும் இந்திய அணிக்குள் அவரால் நுழைய முடியவில்லை.
சுரேஷ் ரெய்னா பேட்டி
கொரோனா வைரஸ் காரணமாக எந்த கிரிக்கெட் போட்டிகளும் நடக்காத நிலையில், கிரிக்கெட் வீரர்கள் சமூக வலைதளங்களில் பேட்டி அளித்து வருகின்றனர். சுரேஷ் ரெய்னா சமீபத்தில் ஸ்போர்ட்ஸ் தக் என்ற யூட்யூப் சேனலுக்கு பேட்டி அளித்தார்.
தேர்வுக் குழு மீது குற்றச்சாட்டு
தான் அளித்த பேட்டியில் மூத்த வீரர்கள் விஷயத்தில் தேர்வுக் குழு இன்னும் பொறுப்பாக நடந்து கொண்டிருக்க வேண்டும் என்றும், தன்னை ஏன் அணியில் இருந்து நீக்கினார்கள் என்ற காரணத்தை கூறவில்லை. என்ன தவறு என தெரிந்தால் தானே அதை சரி செய்து கொள்ள முடியும் என்றும் கூறினார் ரெய்னா.
விசித்திரமான உதாரணம்
அதற்கு பதில் அளித்த முன்னாள் தேர்வுக் குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் விவிஎஸ் லக்ஷ்மன் செய்தது போல சுரேஷ் ரெய்னா செய்யவில்லை என விசித்திரமான உதாரணத்தை சுட்டிக் காட்டி உள்ளார். விவிஎஸ் லக்ஷ்மன் 1999ஆம் ஆண்டு அணியில் இருந்து நீக்கப்பட்டு, பின் உள்ளூர் போட்டிகளில் ரன் குவித்து மீண்டும் அணிக்கு திரும்பினார்.
1400க்கும் மேல் ரன் குவித்தார்
"விவிஎஸ் லக்ஷ்மன் 1999இல் டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்ட போது, உள்ளூர் தொடரில் 1400க்கும் மேல் ரன் குவித்தார். மூத்த வீரர்கள் நீக்கப்படும் போது இதைத்தான் எதிர்பார்க்கிறோம். துரதிர்ஷ்டவசமாக ரெய்னா விஷயத்தில் அந்த பார்மை நாங்கள் பார்க்கவில்லை." என ஒப்பிட்டு கூறி உள்ளார் பிரசாத்,
ரஞ்சி ட்ராபி செயல்பாடு
சுரேஷ் ரெய்னா நீக்கப்பட்ட பின் 2018-19 ரஞ்சி ட்ராபி தொடரில் ஐந்து போட்டிகளில் ஆடினார். அதில் அவர் 243 ரன்கள் குவித்தார். அதில் இரண்டு அரைசதமும் அடங்கும். எனினும், ஐபிஎல் தொடரில் ரன் குவிக்கவில்லை என்பது உண்மை.
200 போட்டிகள் பார்த்துள்ளோம்
மேலும், ரெய்னா தேர்வுக் குழுவினர் ரஞ்சி ட்ராபி போட்டிகளை காணவில்லை எனக் கூறிய புகாருக்கு பதில் அளித்த பிரசாத், தேர்வுக் குழுவினர் நான்கு ஆண்டுகளில் 200 ரஞ்சி ட்ராபி போட்டிகளை நேரில் கண்டதாக கூறினார்.
நான்கு போட்டிகள் மட்டுமே
அதே சமயம், அவர் தான் உத்தரபிரதேசம் ஆடிய நான்கு ரஞ்சி போட்டிகளை நேரில் கண்டதாக கூறினார். நான்கு ஆண்டுகளில் இது மிக மிகக் குறைந்த எண்ணிக்கை என்பதும் குறிப்பிடத்தக்கது. சுரேஷ் ரெய்னா, விவிஎஸ் லக்ஷ்மன் போல பார்மை நிரூபிக்கவில்லை என கூறி உள்ள பிரசாத், அணியில் இருந்து நீக்கப்பட்டு, பின் சேர்க்கப்பட்ட மற்ற வீரர்கள் விவிஎஸ் லக்ஷ்மன் போல பார்மை நிரூபித்தார்களா? என சொல்ல வேண்டும்.