மும்பை: சமீபத்தில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் உள்ளூர் போட்டிகளில் ஆட வேண்டும், அப்படி ஆடினால் மட்டுமே இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவார்கள் என பிசிசிஐ அறிவித்து இருந்தது. அந்த விதி குறித்து பல்வேறு பார்வைகள் உள்ளன. பெரும்பாலானவர்கள் பிசிசிஐ கொண்டு வந்துள்ள விதி மாற்றத்தை வரவேற்று இருக்கின்றனர்.
முன்னாள் வீரர் திலீப் தோஷியம் அதை வரவேற்று இருக்கிறார். உள்ளூர் போட்டிகளில் ஆடுவதன் மூலம் வீரர்கள் தங்களின் உடற் தகுதியையும், திறமையையும் வளர்த்துக் கொள்ள முடியும் என அவர் கூறி இருக்கிறார். எந்த ஒரு வீரராக இருந்தாலும் தனக்கு அணியில் அளிக்கப்பட்டு இருக்கும் இடத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது. அவர் எத்தனை பெரிய நட்சத்திர வீரராக இருந்தாலும் அப்படி நினைக்க கூடாது என திலீப் தோஷி உதாரணங்களுடன் கூறி இருக்கிறார்.

திலீப் தோஷி கூறியதாவது - "சில சமயம் உண்மையில் என்ன நடக்கிறது என தெரிந்து கொள்ள நினைத்து நம்மை நாமே உதைத்து கொள்ள வேண்டி வரும். மறுபடியும் சிந்திக்க வேண்டிய நிலை வரும். இது மிகவும் போட்டி நிறைந்த விளையாட்டு உலகம். அதிர்ஷ்டவசமாக இந்திய அணியில் ஜடேஜா தற்போது உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். மற்றவர்களும் தங்களின் ஆட்டத்தை வெளிக்கொண்டு வருவார்கள்."
"உள்ளூர் போட்டியில் ஆடுவதை பற்றி பலரும் பேசி வருகிறார்கள். ஆனால் நான் அதை தான் செய்தேன். இந்தியாவில் நடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு இடையே ஐந்து நாட்களில் இடைவெளி இருந்த போது நான் பெங்கால் அணிக்காக விளையாடினேன். டெஸ்ட் போட்டி வீரர்கள் அதை செய்ய வேண்டும்."
"கிரிக்கெட்டின் கடவுள்களாக பார்க்கப்படும் டான் பிராட்மேன் கேரி சோபர்ஸ், சச்சின் டெண்டுல்கர் ஆகியோரும் இதை செய்து இருக்கின்றனர். இங்கு யாருக்கும் சலுகைகள் வழங்கப்படுவதற்கான இடம் இல்லை. ஒரு போட்டியில் கிடைக்கும் பயிற்சி என்பது பல லட்சம் மடங்கு வலைப் பயிற்சியை விட சிறந்தது." என்று திலீப் தோஷி கூறினார்.