மும்பை: "இந்திய டி20 அணியில் சுப்மன் கில் நீக்கப்பட்டது சரிதான்.. ஆனால் அந்த இடத்தில் ஆட வேண்டியது ஜெய்ஸ்வால் இல்லையா?" - அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழுவின் முடிவை கடுமையாக சாடியுள்ளார் முன்னாள் ஜாம்பவான் திலிப் வெங்கர்க்கார்.
2026 டி20 உலகக்கோப்பைத் தொடருக்கான அணியில் துணை கேப்டனாக இருந்த சுப்மன் கில் நீக்கப்பட்டது அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. ஆனால், இந்த பரபரப்பில் ஒரு மிகப்பெரிய அநீதி மறைக்கப்படுவதாகக் குமுறியுள்ளார் முன்னாள் தேர்வுக் குழுத் தலைவரும், இந்திய ஜாம்பவானுமான திலிப் வெங்கர்க்கார். அது, இளம் அதிரடி பேட்ஸ்மேன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் புறக்கணிக்கப்பட்டதுதான்.

2024 டி20 உலகக்கோப்பையின் போது ரோஹித் சர்மா - விராட் கோலி ஆகியோர் ஓப்பனிங் இறங்கியதால், ஜெய்ஸ்வால் பெஞ்சில் அமர வைக்கப்பட்டார். சரி, சீனியர்கள் ஓய்வு பெற்ற பிறகு தனக்கான நிரந்தர இடம் கிடைக்கும் என ஜெய்ஸ்வால் நினைத்திருக்கலாம். ஆனால், இரண்டு ஆண்டுகள் கழித்து இன்று 2025-லும் ஜெய்ஸ்வாலுக்கு அணியில் இடமில்லை என்பதுதான் சோகம்.
கடைசியாக ஜூலை 2024-ல் டி20 போட்டியில் ஆடிய ஜெய்ஸ்வால், 200 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்களைக் குவித்தவர். கடைசி 5 போட்டிகளில் ஒரு 93 ரன்கள் உட்பட அதிரடி காட்டியும், அவரால் உலகக்கோப்பை ஸ்குவாடில் நுழைய முடியவில்லை.
"மேட்ச் வின்னரை ஏன் நீக்கினீங்க?" - வெங்கர்க்கார் கேள்வி
பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய திலிப் வெங்கர்க்கார், அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழுவை வறுத்தெடுத்துள்ளார். "எந்தத் தவறும் செய்யாத ஜெய்ஸ்வாலை ஏன் திரும்பத் திரும்பப் புறக்கணிக்கிறீர்கள் என்று தெரியவில்லை. எல்லா ஃபார்மேட்டிலும் அவர் மிகச்சிறந்த ஃபார்மில் இருக்கிறார். ஒரு மேட்ச் வின்னரை இப்படி அணியை விட்டு நீக்குவது மிகப்பெரிய தவறு. அணிக்குள் வர அவர் இன்னும் என்னதான் செய்ய வேண்டும்?" என அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார்.
மேலும், "தொடர்ந்து உனக்கு அணியில் இடமில்லை என்று ஒரு வீரரை ஒதுக்கினால், அது அவரின் தன்னம்பிக்கையைச் சிதைத்துவிடும். கிரிக்கெட்டே நம்பிக்கையை வைத்து ஆடும் விளையாட்டுதான்" எனவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
சுப்மன் கில்லை அணியிலிருந்து நீக்கியது குறித்துப் பேசிய அவர், "தற்போதைய ஃபார்ம் மற்றும் ஃபிட்னஸ் அடிப்படையில் கில்லை நீக்கிய தேர்வுக் குழுவின் முடிவை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அவருக்குப் பதிலாக இஷான் கிஷனை மாற்றுத் தொடக்க வீரராகத் தேர்வு செய்திருப்பதைத்தான் ஏற்க முடியவில்லை.
என்னைக் கேட்டால், அந்த இடத்தில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்குத்தான் வாய்ப்பு கொடுத்திருப்பேன். அவர் ஒரு தரமான வீரர். இன்றைய நவீன கிரிக்கெட்டுக்குத் தேவையான அதிரடித் தொடக்கத்தை அவரால் மட்டுமே தர முடியும்" என்று கூறியுள்ளார். சுப்மன் கில் நீக்கப்பட்ட நிலையில் இஷான் கிஷன் மாற்று துவக்க வீரராகவும், ரிங்கு சிங் ஃபினிஷராகவும் அணிக்குள் வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதியாக, "நீங்கள் தேர்வுக் குழுத் தலைவராக இருந்திருந்தால், ஜெய்ஸ்வாலிடம் என்ன சமாதானம் சொல்லியிருப்பீர்கள்?" என்று நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, வெங்கர்க்கார் அளித்த பதில் நச் ரகம். "நான் அவரிடம் எதுவுமே சொல்லியிருக்க மாட்டேன். ஏன்னா, நான் அவரை அணியை விட்டு நீக்கியிருக்கவே மாட்டேன்" என்று முடித்துக்கொண்டார்.