கோவை: திருச்சி அணிக்கு எதிரான போட்டியில் ஒரே பந்திற்கு 2வது முறையாக டிஆர்எஸ் முறையீட்டுக்கு சென்றது ஏன் என்பது குறித்து திண்டுக்கல் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் விளக்கம் அளித்துள்ளார்.
டிஎன்பிஎல் தொடரில் திண்டுக்கல் அணியின் கேப்டனாக ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடி வருகிறார். நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் திண்டுக்கல் அணியை எதிர்த்து திருச்சி அணி களமிறங்கியது. அப்போது ஆட்டத்தின் 12வது ஓவரை வீசுவதற்காக ரவிச்சந்திரன் அஸ்வின் வந்தார். அந்த ஓவரின் 5வது பந்தில் அஸ்வின் திருச்சி அணியின் முக்கிய பேட்ஸ்மேனான ராஜ்குமார் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

இதற்கு கள நடுவர் அவுட் கொடுக்க, பேட்ஸ்மேன் ராஜ்குமார் உடனடியாக 3ஆம் நடுவரிடம் மேல்முறையீடு சென்றார். அப்போது மூன்றாம் நடுவர் சோதித்துப் பார்த்தபோது, பேட் தரையில் பட்ட போது பந்து பேட்டை கடந்து சென்று இருக்கிறது. அதேபோல் பந்து பேட்டிற்கு வரும் முன்பாக ஸ்னிக்கோமீட்டரில் உரசும் சத்தம் காட்டியது. இதனால் பந்து பேட்டில் படவில்லை என்று கூறி 3ஆம் நடுவர் நாட் அவுட் வழங்கினார்.
பொதுவாக பேட்ஸ்மேன் டிஆர்எஸ் முடிவைக் கேட்டு அதை மூன்றாம் நடுவர் மாற்றினாலோ இல்லை அவுட் கொடுத்தாலோ, போட்டி அடுத்த பந்துக்கு சென்று விடும். ஆனால் அஸ்வின் இந்த முடிவை ஏற்காமல் தங்களுக்கு இருந்த டிஆர்எஸ்-ஐ கேப்டன் என்ற முறையில் பயன்படுத்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இதனை அடுத்து மீண்டும் மூன்றாம் நடுவர் அதே பந்தை ரீப்ளே செய்து அவுட்டா இல்லையா என மீண்டும் பார்த்து மீண்டும் நாட் அவுட் என்றே தீர்ப்பு வழங்கினார்.
அஸ்வினின் செயல்பாடுகள் அதிர்ச்சியையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ஒரே பந்திற்கு எதற்காக இருமுறை டிஆர்எஸ் முறையீடு செய்யப்பட்டது என்று ரவிச்சந்திரன் அஸ்வின் விளக்கம் அளித்துள்ளார். அதில், டிஎன்பிஎல் தொடருக்கு டிஆர்எஸ் புதிதாக கொண்டு வரப்பட்டுள்ளது. ஸ்னிக்கோமீட்டரில் பந்து பேட்டை கடந்த போது ஸ்பைக் வந்தது. ஆனால் நடுவரின் முடிவு எனக்கு சரியாக படவில்லை. இதனால் வேறு கேமரா கோணத்தில் மீண்டும் சோதனை செய்யப்படும் என்று எண்ணி, டிஆர்எஸ் முறையீடு செய்தேன் என்று தெரிவித்துள்ளார்.