நெல்லை: டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரில் தூத்துக்குடி அணிக்கு எதிரான போட்டியில் திண்டுக்கல் அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்று தொடர்ந்து 4-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 13-வது லீக் ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நெல்லையில் நடந்தது. இந்த போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற தூத்துக்குடி அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் தூத்துக்குடி அணி 9 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் கவுசிக் காந்தி அதிகபட்சமாக 35(23) ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். திண்டுக்கல் அணியில் சஞ்சய் 4 ஓவர்கள் வீசி 18 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுக்களை சாய்த்தார்.
பின்னர் விளையாடிய திண்டுக்கல் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் போட்டி டை ஆனது. திண்டுக்கல் அணியில் முருகன் அஸ்வின் 61(51) ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
போட்டி டை ஆனதால் சூப்பர் ஓவர் வீசப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் அணி 6 பந்துகளில் 12 ரன்கள் எடுத்தது. பின்னர் 13 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் விளையாடிய தூத்துக்குடி அணி 5 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனால் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி சூப்பர் ஓவரில் 7 ரன்கள் வித்தியாசத்தில் தூத்துக்குடியை அணியை வீழ்த்தியது. திண்டுக்கல் அணியில் அரைசதம் அடித்த முருகன் அஸ்வின் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் திண்டுக்கல் அணி தொடர்ந்து 4-வது வெற்றியை பதிவு செய்துள்ளது. முதல் தமிழ்நாடு பிரிமீயர் லீக் போட்டியில் திண்டுக்கல் அணி இதுவரை விளையாடிய அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.