சென்னை: தமிழ்நாடு பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் போட்டிகளின் மூன்றாவது சீசன் நாளை துவங்குகிறது. இதில் முதல் ஆட்டத்தில் அஸ்வினின் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியும் நாளை இரவு மோதுகின்றன.
ஐபிஎல் பாணியில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் டி-20 சீசன் 3 போட்டிகள் நாளை துவங்குகின்றன. திருநெல்வேயில் நாளை இரவு 7.15க்கு நடக்கும் முதல் ஆட்டத்தில் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினின் திண்டுக்கல் டிராகன் அணியும், ரூபி திருச்சி அணியும் மோதுகின்றன.
நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, சென்னை சேப்பாக்கத்தில் 14ம் தேதி நடக்கும் தனது முதல் ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸை சந்திக்கிறது.
முதல் இரண்டு சீசன்களில் விளையாடிய 8 அணிகளே இந்த சீசனிலும் பங்கேற்கின்றன. ஆனால், சில அணிகளின் பெயர்கள் மட்டும் மாற்றப்பட்டுள்ளன. மதுரை சூப்பர் ஜயன்ட்ஸ் அணியின் பெயர் சியாசெம் மதுரை பாந்தர்ஸ் என்று மாறியுள்ளது. விபி திருவள்ளூர் வீரன்ஸ் அணியின் பெயர் விபி காஞ்சி வீரன்ஸ் என்று மாறியுள்ளது. காரைக்குடி காளை அணியின் பெயர் ஐடிரீம் காரைக்குடி காளை என்று மாறியுள்ளது.
33 நாட்கள் நடக்கும் இந்த சீசனில் முதலில் 28 போட்டிகள் நடக்கின்றன. அதன்பிறகு ஐபிஎல் பாணியில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றில் விளையாடும். பைனல் ஆகஸ்ட் 12ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடக்கிறது.
இந்த சீசனில் சென்னையில் 4 ஆட்டங்கள் நடக்க உள்ளன. அதைத் தவிர பைனலும் சென்னையில் நடக்க உள்ளது. திண்டுக்கல் என்பிஆர் கல்லூரி மைதானத்தில் 14 போட்டிகள் நடக்க உள்ளன. அதைத் தவிர எலிமினேட்டர் மற்றும் குவாலிபையர் 2 போட்டிகளும் அங்கு நடக்க உள்ளது. திருநெல்வேலி இந்தியா சிமெண்ட்ஸ் மைதானத்தில் 14 போட்டிகளும், முதல் குவாலிபையரும் நடக்க உள்ளது. போட்டிகள் மாலை 3.15 மற்றும் 7.15க்கு துவங்க உள்ளன.