திருநெல்வேலி: டிஎன்பிஎல் டி-20 போட்டித் தொடரில் நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் ஜெகதீசன் மற்றும் விவேக் அதிரடியாக ரன் குவிக்க, திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் சியாசெம் மதுரை பாந்தர்ஸ் அணியை வென்றது.
டிஎன்பிஎல் டி-20 போட்டித் தொடரின் 3வது சீசன் துவங்கியுள்ளது. இதில் திருநெல்வேலியில் நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் சியாசெம் மதுரை பாந்தர்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின.
முதல் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் வென்றது. அதனால், வென்றாக வேண்டிய கட்டாயத்தில் நேற்று திண்டுக்கல் அணி களமிறங்கியது.
முதலில் பேட்டிங் செய்த மதுரை அணிக்கு அருண் கார்த்திக், டி.ரோஹித் அபார தொடக்கத்தை கொடுத்தனர். அருண் கார்த்திக் 61, டி ரோஹித் 24 ரன்கள் எடுத்தனர். தலைவன் சற்குணம் 26, ஷீஜித் சந்திரன் 35 ரன்கள் எடுத்தனர். மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்களையே எடுத்தனர். 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 169 ரன்களுக்கு மதுரை அணி ஆட்டமிழந்தது.
திண்டுக்கல் அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
அடுத்து ஆடிய திண்டுக்கல் அணி 15.2 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஹரி நிஷாந்த் 28 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். என். ஜெகதீசன் 68, ஆர்.விவேக் 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தனர்.