TNPL 2019: காஞ்சியை காலி செய்த திண்டுக்கல் டிராகன்ஸ்..! 7 விக். வித்தியாசத்தில் வென்று முதலிடம்..!
திண்டுக்கல்: டிஎன்பிஎல் கிரிக்கெட்டில், காஞ்சி வீரன்சை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வென்றது.
டிஎன்பிஎல் தொடரில் காஞ்சி வீரன்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகளுக்கு இடையேயான 23வது லீக் ஆட்டம் நடைபெற்றது. டாஸ் வென்ற காஞ்சி வீரன்ஸ் பேட் செய்தது. தொடக்க வீரர்களாக விஷால் வைத்யா மற்றும் அருண் ஆகியோர் களமிறங்கினர்.
இருவரும் இணைந்து அணிக்கு நல்ல தொடக்கத்தை அமைத்தனர். அருண் 12 ரன்களில் ஆட்டமிழக்க, பாபா அபராஜித் டக் அவுட்டானார். சஞ்சய் யாதவ் மற்றும் பிரான்சிஸ் ரோக்கின்ஸ் ஆகியோர் தலா 2 ரன்னில் வீழ்ந்தனர்.

134 ரன்கள் இலக்கு
சதீஷ் 10 ரன்னில் வெளியேறினர். மறுமுனையில் பொறுப்புடன் ஆடிய விஷால் வைத்யா 51 ரன்களில் கேட்ச் ஆனார். முடிவில் லோகேஷ்வர் 26 ரன்களும், சுதேஷ் 2 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் எடுத்தது.

நிஷாந்த் பொறுப்பான ஆட்டம்
பின்னர் 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் டிராகன்ஸ் சார்பில், ஹரி நிஷாந்த் மற்றும் ஜெகதீசன் ஆகியோர் களமிறங்கினர். சிறப்பான துவக்கத்தை தந்த இந்த ஜோடியில் ஜெகதீசன் 21 ரன்களும், அடுத்து களமிறங்கிய சுமந்த் ஜெயின் 8 ரன்களும், கேப்டன் ஆர். அஸ்வின் 8 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

வெற்றி பாதை
பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹரி நிஷாந்த் 38 பந்துகளில் அரை சதம் எட்டினார். அவருடன் விவேக் ஜோடி சேர, அதிரடியாக இருவரும் அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

திண்டுக்கல் வெற்றி
முடிவில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 18.1 ஒவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் எடுத்தது. காஞ்சி வீரன்ஸ் சார்பில் அதிகபட்சமாக திவாகர் 2 விக்கெட்டுகளும், ஹரிஸ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் காஞ்சி வீரன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வெற்றிபெற்றது.


Click it and Unblock the Notifications