தினேஷ் கார்த்திக், தீபிகா படிக்கல் ஜோடிக்கு பிறந்த பெண் தேவதை.. 3வது குழந்தையை வரவேற்ற தம்பதி
சென்னை: இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிக்கல் தம்பதியினருக்கு ராகா பல்லிக்கல் கார்த்திக் என்ற பெண் குழந்தை பிறந்துள்ளது. இச்செய்தியை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த இத்தம்பதி, இரட்டை மகன்கள் கபீர், சியானின் இளைய சகோதரியாக ராகாவை அறிமுகப்படுத்தி, நன்றியையும் பேரானந்தத்தையும் வெளிப்படுத்தினர்.
தங்கள் பதிவில், "இதயத்தில் ஆசீர்வாதங்களுடனும், வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட நன்றியுடனும், எங்கள் அன்புக்குரிய மகளை இந்த உலகத்திற்கு வரவேற்கிறோம். கபீர் மற்றும் சியான், தங்கள் குட்டி சகோதரி ராகா பல்லிக்கல் கார்த்திக்கை அறிமுகப்படுத்துவதில் உற்சாகமாக உள்ளனர். அன்புடனும், தீபிகா & தினேஷ்" எனத் தம்பதியினர் குறிப்பிட்டிருந்தனர்.

கார்த்திக் - பல்லிக்கல் இருவரும் ஆகஸ்ட் 25, 2015 அன்று இந்து, கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். இத்தம்பதிக்கு 2021 இல் கபீர், சியான் என்ற இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. தற்போது இந்த புதிய வரவு குடும்பத்திற்கு மேலும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது.
இந்தியாவின் முன்னாள் விக்கெட் கீப்பர்-பேட்டர் தினேஷ் கார்த்திக், இருபதாண்டுகளுக்கும் மேலாக கிரிக்கெட்டில் பங்களித்துள்ளார். ஓய்வுக்குப் பின் வர்ணனையாளர், பயிற்சியாளர் பொறுப்புகளை ஏற்று, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பேட்டிங் பயிற்சியாளராக உள்ளார்.
தீபிகா பல்லிக்கல், இந்திய ஸ்குவாஷ் வரலாற்றில் உலக தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்த முதல் இந்தியப் பெண். பத்மஸ்ரீ விருது பெற்ற இவர், காமன்வெல்த், ஆசியப் போட்டிகளில் பல பதக்கங்களை வென்று நாட்டின் சிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவராக திகழ்கிறார்.
2023 அக்டோபரில் ஹாங்சூ ஆசியப் போட்டிகளில் கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கம் வென்றது தீபிகாவின் சமீபத்திய சாதனை. 2022 தொடக்கத்தில் மகப்பேறு விடுப்பிற்குப் பிறகு திரும்பிய அவர், உலக இரட்டையர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் இரண்டு பட்டங்களையும், 2022 காமன்வெல்த் போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் வென்று தன் மீள்வருகையைச் சிறப்பித்தார்.


Click it and Unblock the Notifications