பரவிய புகைப்படம்
கரீபியன் பிரீமியர் லீக் எனும் வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் உடை மாற்றும் அறையில் தினேஷ் கார்த்திக் இருந்த புகைப்படம் சில நாட்கள் முன்பு இணையத்தில் பரவியது.
பிசிசிஐயிடம் அனுமதி
இந்திய வீரர்கள் மற்ற விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க, விளையாட்டு சம்பந்தமான நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் முன்பு பிசிசிஐயிடம் அனுமதி வாங்கி இருக்க வேண்டும். மற்ற நாட்டு டி20 தொடர்களில் பங்கேற்க இந்திய வீரர்களுக்கு அனுமதி இல்லை. யுவராஜ் சிங் மட்டுமே சிறப்பு அனுமதி பெற்று இருக்கிறார்.
என்ன சர்ச்சை?
இந்த நிலையில், ஐபிஎல் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் அதே அணியின் உரிமையாளர்களின், மற்றொரு அணியான ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் உடை மாற்றும் அறையில், அந்த அணியின் உடை அணிந்து இருந்தது தான் சர்ச்சையாகி உள்ளது.
பிரெண்டன் மெக்குல்லம்
வெஸ்ட் இண்டீஸ்-இன் உள்ளூர் அணியான ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளர் பிரெண்டன் மெக்குல்லம். அவர் தான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
காரணம் யார்?
அவர் தான் தினேஷ் கார்த்திக் சிக்கலில் மாட்டிக் கொள்ள முக்கிய காரணம். அவருடைய அழைப்பின் பேரில் தான் தினேஷ் கார்த்திக் போர்ட் ஆஃப் ஸ்பெயின் சென்று இருக்கிறார். அவருடைய விருப்பத்தின் பேரில் அந்த அணியின் உடையை அணிந்து இருக்கிறார்.
நோட்டீஸ்
இந்த விவகாரத்தில் பிசிசிஐ தினேஷ் கார்த்திக்கிற்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. பிசிசிஐ - வீரர்கள் இடையே ஆன ஒப்பந்தப்படி தினேஷ் கார்த்திக் அனுமதி வாங்கிய பின்னரே அங்கே சென்று இருக்க வேண்டும். அதற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
கடிதத்தில் மன்னிப்பு
அதற்கு விளக்கம் அளித்துள்ள தினேஷ் கார்த்திக், தன் கடிதத்தில் மன்னிப்பு கேட்டு இருக்கிறார். அதில், மெக்குல்லம் அழைப்பின் பேரில் தான் அங்கே சென்றதாகவும், டரின்பாகோ அணிக்காக போட்டியிலும், வேறு எந்த வகையிலும் தான் பங்களிக்கவில்லை என கூறி இருக்கிறார்.
அங்கே அமர மாட்டேன்
பிசிசிஐ அனுமதி இல்லாமல் அங்கே சென்றதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும், இனி வெஸ்ட் இண்டீஸ்-இல் இருக்கும் வரை அந்த அணியின் உடை மாற்றும் அறையில் தான் அமர மாட்டேன் என்றும் உறுதி அளித்து இருக்கிறார் தினேஷ் கார்த்திக்.
பிசிசிஐ முடிவு
பிசிசிஐயின் நிர்வாக கமிட்டி, தினேஷ் கார்த்திக்கின் மன்னிப்பை ஏற்றுக் கொண்டு அவரை இந்த விவகாரத்தில் அவரை விடுவிக்கும் என கூறப்படுகிறது. தினேஷ் கார்த்திக் உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய அணியில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.