
விலகிய வாய்ப்புகள்
இதுவரை 26 டெஸ்ட் போட்டிகள், 94 ஒருநாள் மற்றும் 32 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆனால் இந்திய கிரிக்கெட்டில் புயல் போல் நுழைந்த தோனி முன்பாக தினேஷ் கார்த்திக் தாக்குப்பிடிக்க முடியவில்லை. தினேஷுக்கென்று தனி கிரிக்கெட் திறமை உள்ளது. விக்கெட் கீப்பிங் எபிலிட்டி உள்ளது. அந்த திறமையே அவர் இந்திய அணியில் பல ஆண்டுகள் நீடித்து விளையாட போதுமானது தான். ஆனால், தோனி என்பவர் அதற்கும் அப்பாற்பட்டவராக இருக்க, வாய்ப்புகள் தினேஷை விட்டு விலகின. தோனியின் ஒவ்வொரு காட்டடி சிக்ஸர்களும் தினேஷ் கார்த்திக்கை ஒவ்வொரு தொடராக அப்புறப்படுத்திக் கொண்டே வந்தன.

பறிபோன கேப்டன்ஷிப்
தற்போது அவர் தொடர்ந்து விளையாடி வருவது ஐபிஎல் தொடரில் தான். அந்த அணியின் கேப்டனாக நியாயமிக்கப்பட்ட தினேஷ் கார்த்திக்கால் வெற்றிகளை வசப்படுத்த முடியவில்லை. இதனால் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். எனினும், ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக அவரது திறன் இன்னமும் அப்படியே தான் இருக்கிறது. இதனால் கொல்கத்தா அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக தொடர்கிறார்.

ஜெகதீசன்
இந்த நிலையில் தமிழ்நாடு அணிக்காக முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் இருப்பது குறித்து தினேஷ் கார்த்திக் மனம் திறந்து பேசியுள்ளார். அதில், 'தமிழ்நாடு அணிக்காக முதல் தர டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட எனக்கு விருப்பம் இல்லை. ஏனெனில், நான் விளையாண்டால் மற்ற இளம் வீரர்கள் பாதிக்கப்படுவார்கள். அவர்களுடைய இடத்தை நான் ஆக்கிரமிப்பதாக ஆகிவிடும். குறிப்பாக விக்கெட் கீப்பர் ஜெகதீசனுக்கு என்னால் வாய்ப்பு பறிபோகும். அப்படியொரு சூழ்நிலை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக முதல் தர கிரிக்கெட்டில் விளையாடாமல் தவிர்க்கிறேன்' என தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

வேற லெவல்
மேலும் இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் விளையாடுவது தான் தற்போதைய நோக்கமாக உள்ளதாகவும், டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட ஆர்வமாக காத்திருக்கிறேன் என்றும் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். கடந்த ஆண்டு இவர் தலைமையிலான தமிழ்நாடு அணி சையத் முஷ்டாக் அலி கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. அதேபோல், இலங்கையில் நடந்த நிடாஹஸ் டிராபி டி20 தொடர், தினேஷ் கார்த்திக்கால் என்றும் மறக்க முடியாத தொடராகும். அதில் வங்கதேச அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் கடைசி ஓவரின் கடைசி பந்தில், இந்திய அணியின் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், சிக்ஸர் அடித்து அணியை வெற்றிப் பெற வைத்தது எல்லாம் வேற லெவல் ஆட்டம் எனலாம்.

ஆக்கிரமிக்கும் இளைஞர்கள்
ஆனால், அவரது கன்சிஸ்டன்சி அடுத்தடுத்த போட்டிகளில் வெளிப்படாமல் அடங்கிவிடுவதே தினேஷ் வளர்ச்சி மட்டுப்படுவதற்கு காரணம் எனலாம். ஐபிஎல்-ல் கூட அவர் அந்த அக்ரெஸிவை காட்டவில்லை. அப்படி காட்டியிருந்தால் கூட அவர் அட்லீஸ்ட் டி20 போட்டிகளிலாவது விளையாடும் வாய்ப்பு கிடைத்திருக்கும். இப்போது ரிஷப் பண்ட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் என்று பெரும் படையே விக்கெட் கீப்பிங் பணிக்கு வந்துவிட்டது. சரி.. அட்லீஸ்ட் ஒரு பேட்ஸ்மேனாக அணியில் இடம் பிடிக்கலாம் என்றால், அதற்கும் டஜன் கணக்கில் இளம் வீரர்கள் வெளியே காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications