ப்ளேயிங் 11 பிரச்சினை
இந்த போட்டிக்கான இந்திய ப்ளேயிங் 11ல் பேட்டிங்கை பொறுத்தவரையில் தெளிவான முடிவுகள் தெரிகின்றன. ஓப்பனிங்கில் சுப்மன் கில் மட்டுமே சற்று மோசமாக விளையாடி வருகிறார். அவரும் இந்த போட்டியில் மாற்றப்பட்டு, பிரித்வி ஷாவுக்கு வாய்ப்பு தரப்படும் எனத்தெரிகிறது. அதன் பிறகு வாஷிங்டன் சுந்தர் வரை பேட்டிங் ஆர்டர் மிகவும் பலமாக தான் உள்ளது.
பவுலிங்கில் உள்ள குழப்பம்
ஆனால் பிரச்சினையே பவுலிங்கில் தான் உள்ளது. 2வது டி20 போட்டியின் போது பிச்ட்-ல் வேகம் குறைவாக இருந்ததால் உம்ரான் மாலிக்கை நீக்கிவிட்டு யுவேந்திர சாஹலை சேர்த்திருந்தனர். ஆனால் அவருக்கும் 2 ஓவர்களே கிடைத்தன. அந்த போட்டியில் மட்டும் 4 ஸ்பின்னர்கள், 3 வேகப்பந்துவீச்சாளர்கள் களமிறக்கப்பட்டிருந்தனர். இதனால் 2 பேர் மட்டுமே முழுமையாக 4 ஓவர்களை வீசினர்.
புதிய பிரச்சினை
இந்நிலையில் 3வது டி20ல் இதுதான் பிரச்சினையாக வந்துள்ளது. அகமதாபாத்தில் வேகப்பந்துவீச்சு, சுழல் இரண்டிற்குமே சாதகமான பிட்ச்-கள் உள்ளன. இதில் ஒருவேளை ஸ்பின்னர்களுக்கு ஏற்ற பிட்ச்-ஐ கொடுத்துவிட்டால், உம்ரான் மாலிக்கை உள்ளே கொண்டு வரலாமா? அல்லது சாஹலே இருந்து 2 ஓவர்களை மட்டும் வீசுவாரா என்ற குழப்பம் நீடித்து வருகிறது.
கூடுதல் பேட்ஸ்மேன்?
இதற்கு முடிவுகட்ட தான் கூடுதல் பேட்ஸ்மேன் என்ற யோசனையை கூறியுள்ளனர். கடந்த போட்டியிலேயே 7 பவுலர்கள் இருந்ததால் ஷிவம் மாவி ஒரே ஒரு ஓவரை தான் வீசினார். அர்ஷ்தீப் மற்றும் சாஹல் 2 ஓவர்களை போட்டனர். எனவே இப்படி பவுலர்களை பயன்படுத்தாமல் வைத்திருப்பதற்கு கூடுதல் பேட்ஸ்மேனாக ஜித்தேஷ் சர்மாவை உள்ளே கொண்டு வர ஆலோசித்து வருகின்றனர்.
தினேஷ் கார்த்திக் யோசனை
சீனியர் வீரர் தினேஷ் கார்த்திக்கும் இதே யோசனையை தான் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், லக்னோவை போன்றே அல்லது அதை விட சற்று நன்றாக அகமதாபாத் களம் இருந்தால் கூடுதல் பேட்ஸ்மேனை வைத்துக்கொள்ளலாம் ஜித்தேஷ் சர்மா சரியாக இருப்பார். நம்.6 இடத்திற்கு அவர் பொருத்தமாக இருப்பார். ஒருவேளை வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக வந்தால் உம்ரான் மாலிக்கை எடுங்கள் எனக்கூறியுள்ளார்.