
ஜனவரி 10ம் தேதி துவக்கம்
சையத் முஸ்தாக் அலி டி20 தொடர் வரும் ஜனவரி 10ம் தேதி துவங்கி 31ம் தேதி வரையில் நடைபெறவுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக ஏறக்குறைய 10 மாதங்களாக நடைபெறாமல் இருந்த உள்ளூர் போட்டிகள் இதன்மூலம் துவங்கவுள்ளது. இதற்கான அணிகளை மாநில கிரிக்கெட் கழகங்கள் அறிவித்து வருகின்றன.

தினேஷ் கார்த்திக் கேப்டன்
இந்நிலையில் தமிழக அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல துணை கேப்டனாக விஜய் சங்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 20 பேர் கொண்ட அணியை தினேஷ் கார்த்திக் தலைமையேற்று நடத்தவுள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒவ்வொரு அணியிலும் 5 வீரர்கள் அதிகமாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

அணியில் ஜகந்நாத் ஸ்ரீனிவாஸ்
இதனிடையே, முதுகுவலி காரமணாக கடந்த 3 ஆண்டுகளாக போட்டிகளில் விளையாடாமல் உள்ள அஸ்வின் கிறிஸ்ட், நியூசிலாந்தில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு குணமாகியுள்ள நிலையில், அவர் தற்போதைய அணியில் இடம்பெற்றுள்ளார். இதேபோல வேகப்பந்து வீச்சாளர் ஜகந்நாத் ஸ்ரீநிவாசும் அணியில் இடம்பிடித்துள்ளார்.

தேர்வுக்குழு தலைவர் பாராட்டு
இதனிடையே, தமிழக கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள தினேஷ் கார்த்திக் பாசிட்டிவ் மற்றும் வலிமையான வீரர் என்றும் இளம் வீரர்கள் மற்றும் மூத்த வீரர்களை சிறப்பாக கையாளும் திறன் படைத்தவர் என்றும் தேர்வுக்குழு தலைவர் வாசுதேவன் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் அனுபவம்
மேலும் கிறிஸ்ட் மற்றும் சந்தீப் வாரியர் மிகவும் திறமையானவர்கள் என்றும் துணை கேப்டன் விஜய் சங்கர், ஐபிஎல்லில் விளையாடிய அனுபவத்தை பெற்றுள்ளதாகவும் மற்ற வீரர்கள் டிஎன்பிஎல்லில் விளையாடி அனுபவத்துடன் உள்ளதாகவும் வாசுவேன் மேலும் கூறினார். வீரர்கள் இந்த 20-20 வடிவத்தை சிறப்பாக பயன்படுத்திக் கொள்வார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications