சென்னை : இந்திய அணி கேப்டனாக அஸ்வினை அறிவிக்க வேண்டும் என தேர்வு உறுப்பினர்களுக்கு தினேஷ் கார்த்திக் கோரிக்கை விடுத்திருக்கிறார். தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தினேஷ் கார்த்திக் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் பந்துவீச்சில் மிகப்பெரிய சாதனைகளை படைத்திருக்கிறார்.
கிரிக்கெட் விளையாடிய சிறந்த வீரர்களில் அவரும் ஒருவர். எத்தனையோ சாதனைகளை படைத்த அஸ்வின் இந்திய அணியை ஒரு முறையாவது கேப்டனாக தலைமை தாங்க வேண்டும்.

அஸ்வின் கேப்டனாக இந்திய அணிக்கு செயல்பட அனைத்து தகுதியும் உரிமையும் இருக்கிறது என்பதை நான் நம்புகிறேன். ஆசிய விளையாட்டுப் போட்டிகள் செப்டம்பர் 23ஆம் தேதி முதல் அக்டோபர் எட்டாம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தொடருக்கு இந்திய அணி தங்களது பி அணியை அனுப்புவதாக நான் கேள்விப்பட்டேன். அஸ்வின் தற்போது ஒரு நாள் போட்டிக்கான திட்டத்தில் இல்லை.
இந்த நிலையில் அஸ்வினை கேப்டனாக நியமித்து ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு இந்திய அணியை அனுப்ப வேண்டும். ஆனால் தேர்வு குழு வேறு முடிவை எடுத்திருப்பதாக நான் அறிகிறேன். ஆனால் அஸ்வினுக்கு இந்த வாய்ப்பை கொடுக்க வேண்டும் என நான் நினைக்கிறேன் என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
இதேபோன்று வரும் ஆகஸ்ட் இறுதியில் தொடங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் கே எல் ராகுலுக்கு தான் விக்கெட் கீப்பராக செயல்பட வாய்ப்பு இருப்பதாக நம்புவதாக தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். ரிஷப் பந்த் தற்போது உடல் தகுதி இல்லாத நிலையில் சாம்சன், கே எல் ராகுல்,இஷான் கிஷன் ஆகிய மூன்று பேருக்கும் இடையே கடும் போட்டி நிலவும். இதனால் யாரை தேர்வு செய்வது என்பது குழப்பமாகத்தான் இருக்கும்.
என்னைக் கேட்டால் கே எல் ராகுலுக்கு தான் முன்னுரிமை வழங்கப்படும் என நினைக்கிறேன் என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். கே எல் ராகுல் இந்திய அணிக்கு நடு வரிசையில் விளையாடி இருக்கிறார். நிறைய ஸ்பெஷல் இன்னிங்ஸ் ஆடி இருப்பதால் அவருக்கு முன்னுரிமை வழங்கலாம் என நினைக்கிறேன்.
ராகுல் காயத்திலிருந்து விரைவாக குணமடைந்து வருவதாகவும் நான் கேள்விப்பட்டேன் என்றும் தினேஷ் கார்த்திக் குறிப்பிட்டார். ராகுல் டிராவிட் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் குறித்து எனக்கு நன்றாக தெரியும். இவர்கள் கூட்டணியில் இந்திய அணி நிச்சயமாக உலக கோப்பையை வெல்லும் என நான் நம்புகிறேன் என்றும் கார்த்திக் கூறியுள்ளார்.