மும்பை : இந்திய கிரிக்கெட் அணியில் அடுத்த தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் வருவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் பயிற்சியாளர் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்ற இலக்கணம் இருக்கின்றது.
அதற்கு கொஞ்சம் கூட கௌதம் கம்பீர் சரியாக வரமாட்டார் என்பது போல் ஒரு வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. பொதுவாக பயிற்சி செய்வதற்கு வீரர்கள் சோம்பேறித்தனப் படுவார்கள். அப்போது பயிற்சியாளர் தான் வீரர்களை ஊக்குவித்து பயிற்சி செய்யுமாறு வற்புறுத்த வேண்டும்.

ஆனால் பயிற்சியாளரே சோம்பேறித்தனமாக இருந்தால் என்ன செய்வது இதுதான் தினேஷ் கார்த்திக் ஒரு வீடியோவில் ஒரு சம்பவத்தை குறிப்பிட்டு தெரிவித்திருக்கிறார். அந்த வீடியோவில் நான் கௌதம் கம்பீரை அசிங்கப்படுத்த வேண்டும் என்பதற்காக நான் இதை சொல்லவில்லை. ஆனால் என் மனதில் இருந்த ஒரு விஷயத்தை நான் சொல்லியே ஆக வேண்டும்.
நான் பார்த்ததிலேயே மிகவும் சோம்பேறித்தனமான ஒரு விளையாட்டு வீரர் என்றால் அது கௌதம் கம்பீர் தான். கம்பீர் எந்த வேலையும் செய்ய மாட்டார். இதற்கு நான் ஒரு உதாரணத்தை சொல்கின்றேன். இந்திய ஏ அணிக்காக நாங்கள் சிறுவயதில் விளையாடுவோம். அப்போது நாங்கள் அனைவரும் ஒரே ஹோட்டலில் இருப்போம்.
எங்கள் அனைவருக்கும் ஒரு ரூம் கொடுத்திருப்பார்கள். அப்போது கம்பீர் ஒரு ரூமில் இருந்து தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருந்தார். நான் அந்த வழியாக சென்றேன். அப்போது திடீரென்று கம்பீர் என்னை அழைத்தார். தினேஷ் கார்த்திக் இங்கே வா என்று கூப்பிட்டார். நானும் ஏதோ ஒரு முக்கிய விஷயத்தை சொல்லப் போகிறார் என்று உடனே அறைக்குள் சென்றேன்.
அப்போது அந்த மேஜையில் இருக்கும் டிவி ரிமோட்டை எடுத்து சேனலை மாற்று என்று கூறினார். இதைக் கேட்டதும் எனக்கு ஷாக் ஆனது. அவர் எழுந்து இரண்டு ஸ்டெப் நகர்ந்து வந்தாலே அந்த டிவி ரிமோட்டை எடுத்திருக்க முடியும். அந்த அளவிற்கு சோம்பேறித்தனமாக கம்பீர் இருந்தார். டிவி ரிமோட்டை வெளியே சென்ற என்னை அழைத்து எடுக்கச் சொன்னார்.
நான் இதை பார்த்து ஷாக் ஆனேன் எப்படி இவர் விளையாட்டு துறையில் பிரபலமாக இருக்கின்றார் என்று நான் நினைத்தேன் என்றார். இந்த உரையாடலின் போது கம்பீரும் அங்கு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பயிற்சியாளர் பொறுப்புக்கு கம்பீர் வரவுள்ள நிலையில் அவர் ஒரு சோம்பேறி என்பதை தினேஷ் கார்த்திக் கூறியிருக்கும் சம்பவம் குறிப்பிடத்தக்கது.