லண்டன்: இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் வியாழக்கிழமை லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளது.
இந்த சூழலில் மூன்றாவது டெஸ்ட் போட்டி குறித்து பேசுவதற்காக தினேஷ் கார்த்திக், ரவி சாஸ்திரி, நாசர் உசேன் மற்றும் மைக்கேல் அத்தர்ட்டன் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் பங்கு பெற்ற ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தங்களுடைய கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடிய அனுபவம் குறித்து நாசர் உசேன் மற்றும் தினேஷ் கார்த்திக் பேசினார். அப்போது பேசிய நாசர் உசேன், இளம் வீரர் அண்டிரூ ஸ்டார்ஸ் அணிக்கு வந்திருந்தார். இதனால் எனக்கு அணியில் இடம் கிடைக்காது என்று நான் முடிவு எடுத்தேன். எனவே நாம் புறப்படுவதற்கான நேரம் வந்துவிட்டது என முடிவெடுத்து பயிற்சியாளர் டங்கன் பிளச்சரை சந்தித்தேன்.
அப்போது நாளை தான் எனக்கு கடைசி டெஸ்ட் போட்டியாக இருக்கும் என நினைக்கிறேன் என்றேன். அதற்கு பயிற்சியாளர் பிளட்ச்சர், நாசர் நீ நன்றாக தான் விளையாடுகிறாய். ஏன் அப்படி முடிவு எடுக்கிறாய் என்று கூறுவார் என்று நினைத்தேன். ஆனால் அவரோ, நினைப்பதெல்லாம் வேண்டாம் நாளை தான் உனக்கு கடைசி டெஸ்ட் போட்டி என்று கூறிவிட்டார்.
உடனே நான் நன்றி கோச் என்று சொல்லி வந்து விட்டேன். எனினும் கடைசி டெஸ்டில் நான் சதம் அடித்தேன் என நாசர் உசேன் தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த தினேஷ் கார்த்திக், நானும் என்னுடைய கடைசி டெஸ்ட் போட்டியை லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தான் விளையாடினேன்.
நீங்கள் பயிற்சியாளர் அறைக்கு சென்று உங்களுடைய ஓய்வு முடிவை அறிவித்தீர்கள். ஆனால் எனக்கு பயிற்சியாளர் என்னை தேடி வந்து இனி அடுத்த டெஸ்ட் போட்டிக்கு நீ தேவையில்லை. இதுதான் உனக்கு கடைசி என்று பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சொல்லிவிட்டு சென்றுவிட்டார் என்று கூறினார். உடனே அங்கிருந்து மற்ற வீரர்கள் அனைவரும் சிரித்தனர். தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் பலமுறை கம்பேக் கொடுத்திருக்கின்றார்.
டெஸ்ட் கிரிக்கெட் பொருத்தவரை எட்டு ஆண்டுக்குப் பிறகு 2018 ஆம் ஆண்டு தினேஷ் கார்த்திக் ஒரு கம்பேக் கொடுத்தார். விர்தமன் சாகா காயமடைந்ததால் தினேஷ் கார்த்திக் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. அதில் ஒரு டெஸ்ட் போட்டி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்தியாவிலும், அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டி இங்கிலாந்து மண்ணிலும் தினேஷ் கார்த்திக் விளையாடினார்.
மொத்தமாக ஐந்து இன்னிங்சில் அவர் 25 ரன்கள் தான் அடித்தார். இதில் இரண்டு டக் அவுட் ஆகும். இங்கிலாந்து மண்ணில் தொடர்ந்து 4 இன்னிங்ஸ்களில் மோசமாக தினேஷ் கார்த்திக் விளையாடியதால் அடுத்து மூன்றாவது டெஸ்டில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.
அப்போது அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் அணியில் இணைந்தார். பண்ட் நான்காவது டெஸ்டில் சதம் அடித்து இந்திய அணியில் தவிர்க்க முடியாத விக்கெட் கீப்பராக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது. தினேஷ் கார்த்திக் 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1025 ரன்கள் அடித்தார் இதில் ஒரு சதம் மிர்பூரில் வங்கதேசத்துக்கு எதிராக வந்தது.