
ஜடேஜாவின் விலகல்
இந்த சூழலில் தான் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார். வலது காலின் மூட்டுப்பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் தீவிரமடைந்துள்ளதால் அவர் வெளியேறியுள்ளார். அவருக்கு மாற்று வீரராக அக்ஷர் பட்டேல் சேர்க்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

தினேஷ் கார்த்திக்கின் இடம்
இந்நிலையில் இந்த மாற்றத்தால் தினேஷ் கார்த்திக்கிற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமீரக களங்களில் மிடில் ஓவர்களின் போது ஸ்பின்னர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். குறிப்பாக இடதுகை ஸ்பின்னர்களுக்கு நன்கு உதவுகிறது. கடந்த பாகிஸ்தான் போட்டியில் அவர்களை சமாளிப்பதற்காக தான் ரவீந்திர ஜடேஜாவை முன்கூட்டியே டிராவிட் களமிறக்கினார்.

பலன் என்ன
4வது வீரராக களமிறங்கிய ஜடேஜா 34 ரன்களை அடித்து இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காக இருந்தார். இதனால் இடதுகை ஸ்பின்னர் முகமது நவாஸை கடைசி ஓவருக்கு பாகிஸ்தான் பயன்படுத்த, இந்தியாவுக்கு சாதகமானது. இதனால் மிடில் ஓவர்களில் கண்டிப்பாக ஒரு இடதுகை பேட்ஸ்மேன் தேவை. அக்ஷர் பட்டேல் பெரியளவில் பேட்டிங் செய்ய மாட்டார் என்பதால், ரிஷப் பண்ட் தான் கடைசி வாய்ப்பு. எனவே பண்ட்- சேர்க்கப்பட்டால் தினேஷ் கார்த்திக் அணியில் இருந்து நிக்கப்பட்டே ஆக வேண்டும்.

டிராவிட் மீது எதிர்பார்ப்பு
டி20 உலகக்கோப்பை தொடருக்காக திட்டமிட்டு வரும் ராகுல் டிராவிட்டிற்கு தினேஷ் கார்த்திக் மிகவும் முக்கியமாகும். எனவே அவரை எப்படியாவது அணிக்குள் கொண்டு வர அதிரடி முடிவுகளையும் எடுக்க துணிந்து வருகிறார். இதனால் அவர் இனி என்ன முடிவை எடுக்கப்போகிறார் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications