மான்செஸ்டர்: போட்டிக்கு தயாராவதா, வேண்டாமா என்ற குழப்பத்திலேயே பல வீரர்கள் அதிகாலை 3 மணி வரை தூங்கவில்லை என்று தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி, மான்செஸ்டரில் நேற்று (செப்.10) தொடங்குவதாய் இருந்தது. ஆனால், இந்திய அணி நிர்வாகிகளிடையே கொரோனா வைரஸ் பரவியதால், அச்சம் காரணமாக இப்போட்டி ரத்து செய்யப்பட்டது.
இந்த டெஸ்ட் தொடரில், இந்தியா 2-1 என்று முன்னிலை பெற்ற நிலையில், ரசிகர்கள் பேராவலுடன் இந்த டெஸ்ட் போட்டிக்காக காத்திருந்தனர். இந்தியா டிரா செய்தால் கூட டெஸ்ட் தொடரை 2007ம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் இங்கிலாந்தில் வெல்லும் அருமையான சூழல் ஏற்பட்டிருந்தது. ஒருவேளை வெற்றிப் பெற்றிருந்தால் 3-1 என்று இதுவரை இல்லாத அளவுக்கு இங்கிலாந்தை டாமினேட் செய்து தொடரைக் கைப்பற்றி இருந்திருக்கலாம். ஆனால், அனைத்துக்கும் இந்த கொரோனா முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.
முன்னதாக, லண்டன் ஓவலில் நடந்த 4வது டெஸ்ட் போட்டியின் போது அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண், ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனால், அவர்கள் 3 பேரும் தனிமைப்படுத்தப்பட்டனர். இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிசியோதெரஃபிஸ்ட் நிதின் பட்டேலும் தனிமைப்படுத்தப்பட்டார்.

இந்த சூழலில், இந்திய கிரிக்கெட் அணியின் உதவி பிசியோதெரஃபிஸ்ட் யோகேஷ் பார்மருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவருடன் இந்திய வீரர்கள் நெருங்கி பணியாற்றியதால், இந்திய அணியில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி, கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நடைமுறைப்படி இந்திய அணியினர் அனைவரும் ஹோட்டல் அறையில் தனிமைப்படுத்தப்பட்டனர். இதனால் வீரர்கள் யாருமே பயிற்சியில் ஈடுபடவில்லை. இறுதியில் 5 வது டெஸ்ட் போட்டி முழுவதும் ரத்து செய்யப்பட்டது.
இது குறித்து முதலில் அறிக்கை வெளியிட்ட இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், "5வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்படுகிறது. இதன் மூலம் ரசிகர்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றம் இருக்கும் என்பதை அறிகிறோம். மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்' என்று குறிப்பிட்டிருந்தது. இதன் பிறகு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வெளியிட்ட அறிக்கையில், "இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மற்றும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (இசிபி) இணைந்து மான்செஸ்டரில் நடைபெறவுள்ள 5 வது டெஸ்ட் போட்டியை நிறுத்த முடிவு செய்துள்ளது. BCCI மற்றும் ECB இந்த கடைசி டெஸ்ட் போட்டியை எப்படியாவது நடத்த பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியது. இருப்பினும், இந்திய அணி நிர்வாகத்தில் கோவிட் -19 பரவுவதால், இந்த டெஸ்ட் போட்டியை நிறுத்தும் முடிவை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டோம். பிசிசிஐ மற்றும் இசிபி இடையே உள்ள வலுவான உறவின் காரணமாக, ரத்து செய்யப்பட்ட டெஸ்ட் போட்டியை வேறு தேதியில் நடத்த இங்கிலாந்து வாரியத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு வாரியங்களும் இந்த டெஸ்ட் போட்டியை மீண்டும் நடத்த ஒரு சரியான நேரத்தை கண்டறியும்." என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், மான்செஸ்டர் டெஸ்ட் போட்டிக்கு முன்பு, இந்திய வீரர்களின் மனநிலை குறித்து எப்படி இருந்தது என்பது குறித்து தினேஷ் கார்த்திக் பேட்டி அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "நான் சில இந்திய வீரர்களிடம் பேசினேன். இந்த தொடரின் அனைத்து போட்டிகளிலும் அனல் பறந்தது. ஆகையால் வீரர்கள் அனைவரும் மிக சோர்வாக இருந்தனர். அவர்களுக்கு கண்டிப்பாக ஒரு ஃபிஸியோ தேவைப்பட்டார். அணியில் இரண்டு பிஸியோக்கள் இருந்தனர். ஆனால், கோச் ரவி சாஸ்திரிக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட போதே, இரண்டு பிஸியோக்களில் ஒருவர் பாதிக்கப்பட்டார். இதனால், மீதமிருந்த ஒரு பிஸியோ மட்டுமே வீரர்களுக்கு உதவி புரிந்தார். அனைத்து வீரர்களுடனும் அவர் ஒருவர் மட்டுமே நெருக்கமாக இருந்தார். ஆனால், இப்போதும் அவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட, பிரச்சனை அங்கே தான் தொடங்கியது. அப்போது தான் வீரர்கள் பயப்படத் தொடங்கினார்கள்.
இதனால், பெரும்பாலான வீரர்கள் அதிகாலை 2.30 - 3 மணி வரை கூட தூங்கவில்லை, ஏனென்றால் தாங்கள் போட்டிக்கு தயாராக இருக்க வேண்டுமா? அல்லது என்ன நடக்கப் போகிறது என்று எந்த முடிவுக்கும் அவர்களால் வர முடியவில்லை. மனரீதியாக தங்களை தயார்படுத்திக் கொள்ள அவர்களால் முடியவில்லை. பெரும்பாலோர் தூங்கவே இல்லை. அதுமட்டுமின்றி, போட்டிக்கு முன்பு எடுக்கப்பட்ட சோதனையில் வீரர்களுக்கு கொரோனா நெகட்டிவ் என்றே ரிசல்ட் வந்தது. ஒருவேளை, 3 நாட்களுக்கு பிறகு, ஏதாவது ஒரு வீரருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால், அந்த அணியின் அணியில் இடம்பெற்றிருந்து மூன்று நாட்களுக்கு விளையாடி இருந்தால் என்ன ஆவது? சற்று கற்பனை செய்து பாருங்கள்.
அணியில் முக்கால்வாசி வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கும். ஐபிஎல் வேறு அடுத்த இன்னும் ஒரே வார காலத்தில் தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து டி20 உலகக் கோப்பை, நியூசிலாந்து தொடர் என்று அடுத்தடுத்து மிக முக்கியமான தொடர்கள் வரவுள்ளன. இவை அனைத்தையும் கணக்கு செய்தே கடைசி டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்படுவது குறித்து முடிவு செய்யப்பட்டது" என்று கூறியுள்ளார்.