வெற்றி ஷாட்களை அடித்தது எப்படி? தினேஷ் கார்த்திக் ஓபன் டாக்.. இந்திய பிளேயிங் லெவன் குறித்து கருத்து
நாக்பூர் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் ஒரு சிக்ஸர் ஒரு பவுண்டரி விளாசி இந்திய அணிக்கு வெற்றியை தேடி தந்தார்.
கடந்த சில போட்டிகளில் தடுமாறிய தினேஷ் கார்த்திக் இன்று அதிரடியாக ஆடி ரசிகர்களின் நம்பிக்கையை பலப்படுத்தி இருக்கிறார்.
தாம் வெற்றி ஷாட்களை அடித்தது எப்படி என்பது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதை தற்போது காணலாம்.

திட்டமிட்டேன்
நான் பேட்டிங் செய்ய களத்துக்கு வந்த போது பெரியதாக நாங்கள் பேசிக் கொள்ளவில்லை. ரோகித் சர்மா என்னிடம் ஒரே ஒரு விஷயத்தை தான் கூறினார். கடைசி ஓவர் வீசும் சாம்ஸ் எந்த வகை பந்தை வீசுவார் என்பதை மட்டும் கூறினார். இதனை வைத்து அதை எப்படி எதிர்கொள்வது என்று நானே திட்டமிட்டேன்.

பயிற்சிகளை செய்வேன்
நடு வரிசையில் இடம் பெற்றிருக்கும் வீரர்கள் ஷாட்டுகளை எப்படி ஆட வேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டும். உள்ளபடியே வெற்றி ரன்களை அடித்தது நல்ல உணர்வாக இருக்கிறது. கிரிக்கெட் விளையாடாத காலகட்டத்தில் மனதில் இது போன்ற நெருக்கடியான சூழ்நிலையில் அணிக்காக விளையாடுவது போல் உருவாக்கி கொண்டு பயிற்சிகளை செய்வேன்.

ரோகித்துக்கு பாராட்டு
ரோகித் சர்மா பேட்டிங்கில் அதிரடியை காட்டினார். வேகப் பந்துவீச்சை உலகத்திலே சிறப்பாக எதிர்கொள்ளும் வீரர் என்றால் அது ரோகித் சர்மா தான். இதேபோன்று அக்சர் பட்டேல் பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டு வெற்றியைத் தேடித் தந்திருக்கிறார். பும்ராவை களத்தில் இன்று நீண்ட நாட்களுக்கு பிறகு பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போது தொடர் 1-1 என்று கணக்கில் சமனில் இருக்கிறது. ஹைதராபாத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுவோம் என நம்புகிறேன்.

மக்களுக்காக விளையாடினோம்
இது போன்ற நெருக்கடியான போட்டியில் விளையாடுவது அவசியம். ஹர்திக் பாண்டியா அணியில் இருப்பதால் இந்திய அணி ஒரு பேட்ஸ்மேன் அல்லது ஒரு பந்துவீச்சாளரை கூடுதலாக பயன்படுத்திக் கொள்ளலாம். நாக்பூரில் நீண்ட நாட்களுக்கு பிறகு கிரிக்கெட் போட்டி நடைபெற்றதால் ஆயிரக்கணக்கான மக்கள் சாலையில் எங்களுக்காக காத்திருந்தனர் ஆடுகளம் விளையாடுவதற்கு சிறப்பான சூழலாக இல்லை இருப்பினும் மக்களுக்காகத்தான் இந்த போட்டியில் விளையாடினோம்.


Click it and Unblock the Notifications