சென்னை: சொந்த மண்ணில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவிடம் 0-2 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் தோல்வி அடைந்ததை அடுத்து, இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். "இந்திய மண்ணில் இந்திய அணி மீதான பயம் எதிரணிகளுக்குப் போய்விட்டது" என்று அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
கவுகாத்தியில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 408 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வி அடைந்தது. கடந்த 12 மாதங்களில் இந்திய அணி சொந்த மண்ணில் சந்திக்கும் இரண்டாவது ஒயிட்வாஷ் இதுவாகும்.

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள தினேஷ் கார்த்திக், "முன்பெல்லாம் வெளிநாட்டு அணிகள் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட இந்தியா வருவதற்குப் பயப்படுவார்கள். ஆனால் இப்போது நிலைமை தலைகீழ். இந்தியாவை வீழ்த்தலாம் என்று நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு ஆவலோடு வருகிறார்கள்" என்று காட்டமாகப் பேசினார்.
மேலும், "கடந்த 12 மாதங்களில் இது இரண்டாவது ஒயிட்வாஷ். இந்தியாவில் நடந்த கடைசி மூன்று தொடர்களில் இரண்டில் நாம் ஒயிட்வாஷ் ஆகியுள்ளோம். இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு இது மிகவும் கடினமான காலம். கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய நேரம் இது" என்றார்.
இந்திய அணியின் பிளேயிங் லெவன் தேர்வு குறித்துப் பேசிய தினேஷ் கார்த்திக், "இந்தியப் பந்துவீச்சாளர்கள் சொந்த மண்ணிலேயே எதிரணி வீரர்களிடம் அடி வாங்குகிறார்கள். தேவைக்கும் அதிகமான ஆல்-ரவுண்டர்களை அணியில் திணிக்கிறார்கள். வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் என்று சொல்லப்படும் நிதிஷ் குமார் ரெட்டி, உள்ளூர் சீசன் முழுவதிலும் சேர்த்தே 14 ஓவர்கள் தான் வீசியிருப்பார். அவரை டெஸ்ட் அணியில் எப்படி நம்புவது?
இந்தத் தொடரில் இந்தியத் தரப்பில் வெறும் 2 பேட்ஸ்மேன்கள் மட்டுமே சதம் அடித்தனர். ஆனால் தென்னாப்பிரிக்கத் தரப்பில் 7 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. இதுதான் இரு அணிகளுக்கும் உள்ள வித்தியாசம்" என்று சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து அணியில் நிலவும் நிலையற்ற தன்மை குறித்துப் பேசிய தினேஷ் கார்த்திக் "உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில், முதல் இன்னிங்ஸில் நம்பர் 3 இடத்தில் ஆடும் வீரர்களின் சராசரி வெறும் 26 தான். இது இரண்டாவது மிக மோசமான ரெக்கார்ட்.
உண்மையில் நமது நம்பர் 3 வீரர் யார்? கொல்கத்தாவில் வாஷிங்டன் சுந்தரை இறக்குகிறீர்கள். கவுகாத்தியில் சாய் சுதர்சனை இறக்குகிறீர்கள். இப்படி ஆட்களை மாற்றிக்கொண்டே இருப்பது அணிக்கு உதவாது. நமக்குத் தேவை நிலையானத் தன்மை" என்று விளாசினார்.
இறுதியாக, "அடுத்த டெஸ்ட் தொடர் வர இன்னும் 7 மாதங்கள் ஆகும். இடையில் ஐபிஎல், ஒருநாள் போட்டிகள் என வந்துவிடும் என்பதால், இந்தத் தோல்வியை அப்படியே மறந்துவிடப் போகிறோமா? மீண்டும் பழைய பலமான இந்திய அணியாக மாற என்ன செய்யப் போகிறோம் என்பதுதான் பெரிய கேள்வி" என்று தினேஷ் கார்த்திக் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.