மும்பை : கிரிக்கெட் போட்டிகளை ஆன்லைனில் பார்க்க ஒவ்வொரு ஓடிடி தளத்திற்கும் காசுகட்டி பார்க்க வேண்டுமே என்று ரசிகர்கள் சோகத்தில் இருந்தனர். ஐபிஎல் தொடரை பார்க்க கடந்த ஆண்டு வரை டிஸ்னி hotstarக்கு காசுக்கட்டி கொண்டு தான் ரசிகர்களும் பார்த்தனர்.
ஆனால் இதனை அம்பானியின் ஜியோ நிறுவனம் சுக்கு நூறாக உடைத்தது. தங்களுடைய புதிய ஒடிடி தளமான ஜியோ சினிமா நிறுவனம் ஐபிஎல் ஒளிபரப்பும் உரிமத்தை வாங்கியது. ஜியோ நிறுவனம் பெரும் தொகையை செலவழித்ததால் ஐபிஎல் க்கு அவர்கள் பெரிய அளவில் காசு வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஐபிஎல் தொடர் முற்றிலும் இலவசம் என்று அறிவித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்கள். jio-வின் வருகையால் ஹாட்ஸ்டாருக்கு பெரும் அடி விழுந்தது. ஐபிஎல் உரிமையை தவற விட்டதால் சுமார் ஒரு கோடி பார்வையாளர்கள் ஹாட்ஸ்டாரை விட்டு வெளியேறினர்.இந்த நிலையில் இழந்த மார்க்கெட்டை பிடிக்கும் விதமாக ஹாட்ஸ்டார் தற்போது ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி ஆட்டத்தை ஒளிபரப்பு செய்து வருகிறது.
ஆனால் இந்த தொடரை வெறும் 10 லட்சத்துக்கு அதிகமான மக்கள் தான் பார்க்கிறார்கள். இது எதிர்பார்த்ததை விட மிகவும் குறைவு. இதனால் ஜியோ நிறுவனத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஹாட்ஸ்டார் தற்போது மிகப்பெரிய இரண்டு அறிவிப்பை கொடுத்துள்ளது. அதன்படி ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் மற்றும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் என அனைத்தையும் ஹாட் ஸ்டாரில் இலவசமாக பார்க்கலாம் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. அண்மையில் தான் இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் கிரிக்கெட் தொடரை இலவசமாக ஒளிபரப்பு உள்ளதாக ஜியோ சினிமா அறிவித்தது.
இந்த நிலையில் தான் இப்படி ஒரு மிகப்பெரிய ஆச்சரியத்தை ரசிகர்களுக்கு hotstar நிறுவனம் கொடுத்திருக்கிறது. இதன் மூலம் ஹாட்ஸ்டார் பக்கம் அதிக ரசிகர்கள் திரும்பவும் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. காசு கட்டினால் தான் இணையதளத்தில் இலவசமாக கிரிக்கெட் போட்டியை பார்க்க முடியும் என்ற நிலையை அம்பானியின் ஜியோ நிறுவனம் தான் மாற்றிவிட்டதாக ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.