மெல்போர்ன்: பெங்களூருவில் மர்மமான முறையில் இறந்த ஐஏஎஸ் அதிகாரி டி.கே.ரவி சாவுக்கு மெல்போர்னில் நியாயம் கேட்டுள்ளனர் ரசிகர்கள்.
கர்நாடக வரித்துறை அமலாக்கப் பிரிவில் கூடுதல் கமிஷனராக பணியாற்றிய ஐஏஎஸ் அதிகாரி டி.கே.ரவி இரு தினங்களுக்கு முன்பு, பெங்களூருவிலுள்ள தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்தார்.
இவர் வரி ஏய்ப்பு செய்யும் ரியல் எஸ்டேட் மாஃபியாக்களாலோ, அல்லது மணல் கடத்தல் மாஃபியாக்களாலோ கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று ஒருசாரார் சந்தேகப்படுகின்றனர்.
ஆனால், குடும்ப தகராறு காரணமாக தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். எனவே, இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரிக்க பாஜக, மஜத போன்ற கர்நாடக எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துவருகின்றன. ஆனால், ஆளும், சித்தராமையா தலைமையிலான, காங்கிரஸ் அரசோ, மாநில சிஐடி போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
எனவே, சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்தி, பல தன்னார்வலர்கள் கையெழுத்து இயக்கங்களை தொடங்கியுள்ளனர். இணையதளத்திலும் சிபிஐ விசாரணை கோரி பிரசாரங்கள் நடக்கின்றன. இந்நிலையில், மெல்போர்னில் இன்று நடைபெற்ற இந்தியா-வங்கதேசம் நடுவேயான உலக கோப்பை கிரிக்கெட் காலிறுதி போட்டியை காண சென்ற ரசிகர்கள் சிலர், டி.கே.ரவி புகைப்படத்துடன் நியாயம் கேட்டுள்ளனர். அந்த ரசிகர்கள் கர்நாடகாவை சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது. இப்படங்கள் வைரலாகியுள்ளன.