கேப்டன் பதவி போச்சு
டெல்லி அணி 8 ஆட்டங்களில் 2ல் மட்டுமே வென்று, 4 புள்ளிகளை மட்டுமே பெற்றிருந்தது. அணியின் தொடர் தோல்விகளுக்கு பொறுப்பேற்று கேப்டன் பதவியில் இருந்து கவுதம் கம்பீர் விலகினார். அதையடுத்து ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனானார். அஜிங்யா ரஹானே கேப்டனாக உள்ள ராஜஸ்தான் 7ல் மூன்று வெற்றிகளுடன் 6 புள்ளிகளைப் பெற்று புள்ளிப் பட்டியலில் 6வது இடத்தில் இருந்தது.
வாழ்வா சாவா போட்டி
இரு அணிகளும் இந்த சீசனில் ஏற்கனவே மோதின. மழை குறுக்கிட்ட அந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணி வென்றது. இனி நடக்கும் ஒவ்வொரு ஆட்டத்திலும் வெற்றி பெற வேண்டிய கட்டாய நிலையில் இரு அணிகள் உள்ளன. இன்றைய போட்டியில் வெற்றி என்பது, இரு அணிகளுக்கும் வாழ்வா - சாவா என்பதை நிர்ணயிக்கக் கூடியதாக அமைந்திருந்தது.
ஸ்ரேயாஸ், ரிஷப் பேயாட்டம்
டெல்லியில் நடந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. திடீர் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட, 18 ஓவர்களாக குறைக்கப்பட்டது. பிருத்வி ஷா 25 பந்துகளில் 47 ரன்கள் குவித்தார். கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 35 பந்துகளில் 50, ரிஷப் பந்த் 29 பந்துகளில் 69 ரன்கள் குவித்து பேயாட்டம் ஆடினர். டெல்லி 17.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்தது. மீண்டும் மழை குறுக்கிட்டது.
டெல்லிக்கு மூன்றாவது வெற்றி
அதனால் ராஜஸ்தான் அணிக்கு 12 ஓவர்களில் 151 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. முதல் பந்தில் இருந்தே ஜோஸ் பட்லர் அதிரடி காட்டினார். அவர் 26 பந்துகளில், 4 பவுண்டர், 7 சிக்சர்களுடன் 67 ரன்கள் குவித்தார். அவர் ஆட்டமிழந்தபிறகு, ஸ்கோர் வேகம் குறைந்தது. கடைசியில் 12 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 146 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. டெல்லி அணி 4 ரன்களில் இந்த சீசனில் மூன்றாவது வெற்றியைப் பெற்றது. புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த டெல்லி 6வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.