இந்திய கிரிக்கெட் ரசிகர்களே, இன்று என்ன நாள் தெரியுமா?
சென்னை: 4 ஆண்டுகளுக்கு முன்பு இதே தினத்தில் தான் டோணி தலைமையிலான இந்திய அணி கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்று நம்மை எல்லாம் பெருமை அடைய வைத்தது.
இந்த ஆண்டு நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்திய ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. காரணம் ஃபார்மில் சொதப்பலாக இருக்கிறது என்று விமர்சனத்திற்கு உள்ளான டோணி தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பை தொடரில் ஆடிய ஆட்டத்தை பார்த்து வியக்காதவர்கள் இல்லை.
கிரிக்கெட் மீது விருப்பம் இல்லாதவர்கள் கூட இம்முறை இந்திய அணி ஆடிய அனைத்து ஆட்டத்தையும் ரசித்து பார்த்தனர்.

7 வெற்றி
உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி அசத்தலாக ஆடி தொடர்ந்து 7 போட்டிகளில் வெற்றி பெற்றது. ஆனால் அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் பரிதாபமாக தோல்வி அடைந்தது. இதன் மூலம் உலகக் கோப்பையை தக்க வைக்க போராடிய இந்திய அணியின் ஆசை நிராசையானது.

2011
முன்னதாக 2011ம் ஆண்டில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் மும்பையில் நடந்த இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி டோணி தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்றது. டோணி அணி கோப்பையை வென்றதை பார்த்து இந்திய ரசிகர்கள் சொல்ல முடியாத அளவுக்கு சந்தோஷம் அடைந்தனர். மாதக் கணக்கில் அந்த மகிழ்ச்சியை கொண்டாடினர்.

ஏப்ரல் 2
2011ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி தான் இந்திய அணி இரண்டாவது முறையாக கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்று நாட்டுக்கு பெருமை தேடித் தந்தது. டோணி அணி உலகக் கோப்பையை வென்று இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடைகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. கோப்பையை தக்க வைக்க முடியவில்லை என்ற கவலை இருந்தாலும் இந்திய அணி சிறப்பாக ஆடி கௌரவமாகத் தான் தோற்றது என்பதை நினைத்து மனதை தேற்றிக் கொள்ள வேண்டும்.

28 ஆண்டு ஏக்கம்
கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி 1983ம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றது. அதன் பிறகு உலகக் கோப்பை தொடரில் விளையாட சென்ற இந்திய அணி பல ஆண்டுகளாக வெறுங்கையுடனேயே திரும்பி வந்தது. இந்தியா மீண்டும் உலகக் கோப்பையை வெல்லாதா என்று 28 ஆண்டுகள் இந்திய ரசிகர்கள் ஏங்கினர். அவர்களின் ஏக்கத்தை டோணி தலைமையிலான அணி 2011ம் ஆண்டு போக்கியது.


Click it and Unblock the Notifications