பௌலிங்கில் தொய்வு
முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியின் வழிகாட்டுதலில் இந்திய அணியில் சிறப்பாக செயல்பட்டவர் ஸ்பின்னர் குல்தீப் யாதவ். தோனியின் விக்கெட் கீப்பிங்கில் இவர் சிறப்பாக செயல்பட்ட நிலையில், கடந்த ஆண்டு தோனி அணியிலிருந்து விலகியவுடன், இவரது பௌலிங்கிலும் தொய்வு ஏற்பட்டது. இந்திய அணிக்காக 6 டெஸ்ட் போட்டிகள், 60 ஒருநாள் மற்றும் 21 டி20 போட்டிகளில் விளையாடி முறையே, 24, 104 மற்றும் 39 விக்கெட்டுகளை இவர் வீழ்த்தியுள்ளார்.
டீம் வொர்க் தான்
இந்நிலையில், தான் தன்னுடைய வெற்றிக்காக யாரையும் குறிப்பாக முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியை நம்பியிருக்க வில்லை என்று குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார். மேலும் தோனி அணியில் இல்லாத நிலையில் தன்னுடைய திறமையை தான் யாருக்கும் நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். தோனியுடன் இணைந்து டீம் வொர்க்கை மேற்கொண்டு தன்னை மெருகேற்றிக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறப்பான டீம் வொர்க்
தோனி தன்னை எப்போதுமே சிறப்பாக வழிநடத்துவார் என்பதை மறுக்க முடியாது. தோனி பௌலர்களை சிறப்பாக எடைபோடுவார் மேலும் பேட்ஸ்மேன்களின் ஆட்டம் குறித்தும் தன்னுடைய அனுபவம் மூலம் அனைத்தையும் தெரிந்து வைத்திருந்தார். இதை வைத்து அவர் பௌலர்களை சிறப்பாக வழிநடத்துவார். இதெல்லாம் டீம் வொர்க் தான் என்றும் குல்தீப் தெரிவித்துள்ளார்.
முதல் போட்டியில் 4 விக்கெட்டுகள்
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 2 ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள குல்தீப் யாதவ், தர்மசாலாவில் கடந்த 2017ல் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்திய அணி மோதிய டெஸ்ட் போட்டியின் மூலம் தன்னுடைய முதல் சர்வதேச போட்டியில் விளையாடினார். தன்னுடைய முதல் போட்டியிலேயே 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரையும் கவர அவர் தவறவில்லை.