டல்லாஸ்: அமெரிக்காவில் நடைபெற்று வரும் மேஜர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் நிறுவனத்தின் மற்றொரு அணியான டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி, ஐந்து ஓவர் போட்டியில் அதிரடியாக ஆடி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டோனோவான் பெரேரா ஆடிய ஆட்டம் ரசிகர்களை வியப்பின் உச்சிக்கு கொண்டு சென்றது.
டோனோவான் பெரேரா வெறும் 9 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்து இந்த ஐந்து ஓவர் போட்டியில் மிரட்டல் ஆட்டத்தை ஆடினார். அவர் ஐந்து சிக்ஸர்களை அடித்திருந்தார், ஆனால் ஒரு ஃபோர் கூட அடிக்கவில்லை. அவரது ஸ்ட்ரைக் ரேட் 411.1 என்பதாக இருந்தது.

வாஷிங்டன் ஃப்ரீடம் அணிக்கு எதிராக மழையின் காரணமாக ஓவர்கள் குறைக்கப்பட்டு நடந்த இந்த ஐந்து ஓவர் போட்டியில் துவக்க வீரர்களாக இறங்கிய மார்கஸ் ஸ்டோய்னிஸ் 2 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டேரில் மிட்செல் 5 பந்துகளைச் சந்தித்து 6 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவரால் ஒரு பவுண்டரி கூட அடிக்க முடியாத நிலையில், 5 பந்துகளை மட்டுமே சந்தித்த உடன் அவரை 'ரிட்டையர்டு அவுட்' ஆகுமாறு அணி நிர்வாகம் கூறியது. அதை ஏற்று அவர் வெளியேறினார்.
அதன் பிறகு சுபம் ரஞ்சன் மற்றும் டோனோவான் பெரேரா இணைந்து அதிரடி ஆட்டம் ஆடினார்கள். சுபம் ரஞ்சன் 14 பந்துகளில் 39 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவர் நான்கு ஃபோர்கள் மற்றும் 3 சிக்ஸர்களை விளாசி இருந்தார்.
கடைசி ஓவரைச் சந்தித்த டோனோவான், அந்த ஓவரில் நான்கு சிக்ஸர்களையும், சிங்கிள் ரன்களாக நான்கு ரன்களையும் எடுத்தார். அந்த ஒரு ஓவரில் மட்டுமே டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 28 ரன்கள் எடுத்தது. டோனோவான் பெரேரா 9 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி, அடுத்து வாஷிங்டன் ஃப்ரீடம் அணிக்கு 88 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயம் செய்தது. அதை நோக்கி ஆடிய அந்த அணி, 5 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 44 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக க்ளென் பிலிப்ஸ் 11 பந்துகளில் 18 ரன்கள் எடுத்திருந்தார். வாஷிங்டன் ஃப்ரீடம் அணி மோசமாக ஆடி இந்த ஐந்து ஓவர் போட்டியில் 43 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
டோனோவான் பெரேரா டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்காக இந்த முறை இரண்டு முறை 'ஆட்ட நாயகன்' விருது வென்று இருக்கிறார். அந்த அணிக்காக இரண்டு முறை ஆட்ட நாயகன் விருதை வென்ற முதல் வீரர் என்ற சாதனையையும் அவர் செய்திருக்கிறார். மேலும், அவர் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் ஆடிய கடைசி ஐந்து போட்டிகளிலும் அதிரடியாக ரன் சேர்த்து மிரட்டி இருக்கிறார். இதை சுட்டிக்காட்டி அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆட வைக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.