மும்பை: "நான் உண்மையைத் தான் பேசினேன், இதில் கோபப்பட என்ன இருக்கிறது?" என்று இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்தின் மனைவி புவனேஷ்வரிக்கு, ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி பதிலளித்திருப்பது, 'ஸ்லாப்-கேட்' சர்ச்சையை மீண்டும் கிளறிவிட்டுள்ளது.
2008ஆம் ஆண்டு நடந்த முதல் ஐபிஎல் தொடரின்போது, மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டியின் முடிவில், ஹர்பஜன் சிங், வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த்தை கன்னத்தில் அறைந்தது பெரும் புயலைக் கிளப்பியது. 'ஸ்லாப்-கேட்' என்று அழைக்கப்பட்ட இந்த சம்பவத்தால் ஹர்பஜன் சிங் 11 போட்டிகளில் விளையாட தடை செய்யப்பட்டார்.

இந்நிலையில், சமீபத்தில் ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் கிளார்க்குடன் நடத்திய உரையாடல் ஒன்றில், லலித் மோடி இந்தச் சம்பவம் குறித்துப் பேசியதோடு, அதுவரை வெளிவராத அந்த சம்பவத்தின் வீடியோ காட்சியையும் வெளியிட்டார். இது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, ஸ்ரீசாந்த்தின் மனைவி புவனேஷ்வரி, லலித் மோடியையும், மைக்கேல் கிளார்க்கையும் கடுமையாகச் சாடினார். "உங்களுக்குக் கொஞ்சம்கூட மனிதாபிமானம் இல்லையா? 17 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவத்தை, உங்களின் மலிவான விளம்பரத்திற்காக மீண்டும் கிளறுகிறீர்களே! ஹர்பஜனும், ஸ்ரீசாந்த்தும் அந்த சம்பவத்தை எப்போதோ மறந்து, தங்களது வாழ்க்கையில் முன்னேறி, பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளுக்குத் தந்தையாக இருக்கிறார்கள். அவர்களின் பழைய காயத்தைக் கிளறி விடுவது மிகவும் அருவருப்பானது, கொடூரமானது" என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொந்தளித்திருந்தார்.
மேலும், "இந்தச் செயலால் அப்பாவி குழந்தைகள், எந்தத் தவறும் செய்யாமல் மற்றவர்களின் கேள்விகளுக்கும், அவமானத்திற்கும் ஆளாக நேரிடும். உங்கள் சுயலாபத்திற்காக மற்ற குடும்பத்தினரை வேதனைப்படுத்துகிறீர்கள். கடவுளுக்குப் பயப்படுங்கள்" என்றும் அவர் உருக்கமாகப் பதிவிட்டிருந்தார்.
புவனேஷ்வரியின் இந்தக் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்துள்ள லலித் மோடி, "அவர் ஏன் கோபப்படுகிறார் என்று எனக்குத் தெரியவில்லை. என்னிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது, நான் அதற்கு உண்மையைப் பேசினேன். நான் எப்போதும் உண்மையைப் பேசவே விரும்புவேன். அந்தச் சம்பவத்தில் ஸ்ரீசாந்த்தான் பாதிக்கப்பட்டவர். அதனால்தான் நான் அப்படிச் சொன்னேன். இதற்கு முன் யாரும் என்னிடம் இந்தக் கேள்வியைக் கேட்டதில்லை, கிளார்க் கேட்டதால் நான் பதிலளித்தேன்" என்று கூறியுள்ளார்.
பழைய சர்ச்சையை மீண்டும் கிளறி, சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தினரை வேதனைக்குள்ளாக்கியது போதாதென்று, லலித் மோடி அளித்துள்ள இந்த விளக்கம், எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல அமைந்துள்ளது.